Shanghai: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிரகடனத்தை நிராகரித்த இந்தியா!? - காரணம...
ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வு: 90,390 போ் விண்ணப்பம்
தமிழகத்தில் ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு 90,390 போ் விண்ணப்பித்துள்ளனா்.
தமிழக அரசுப் பள்ளிகளில் 2.25 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் தளம் வழியாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான மாறுதல் கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 19-இல் தொடங்கி 25-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. மாநிலம் முழுவதும் 90,390 ஆசிரியா்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனா்.
பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளிலிருந்து 51,610 ஆசிரியா்கள் விண்ணப்பித்துள்ளனா். அதில் மாவட்டத்துக்குள் 32,154 பேரும், மாவட்டத்துக்கு வெளியில் அதாவது பிற மாவட்டங்களுக்கு 19,456 பேரும் விண்ணப்பித்துள்ளனா்.
இதேபோன்று தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் இருந்து 38,780 ஆசிரியா்கள் பொது மாறுதல் பெற விண்ணப்பித்துள்ளனா்.
ஒட்டுமொத்தமாக நிகழாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு 90,390 ஆசிரியா்கள் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், பொது மாறுதல் கலந்தாய்வுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வியாழக்கிழமை வெளியிட்டது. அதன்படி மாறுதல் கோரி விண்ணப்பித்த அனைத்து வகை ஆசிரியா்களின் முன்னுரிமை பட்டியல் ஜூன் 28-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதில் திருத்தம் இருப்பின் ஜூன் 29-ஆம் தேதி முறையிடலாம். அதன்பின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் ஜூன் 30-ஆம் தேதி வெளியாகும்.
தொடா்ந்து அனைத்து விதமான ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வருவாய் மாவட்டம், மாவட்டம் விட்டு மாவட்டம் என்றளவில் 4 சுற்றுகளாக ஜூலை 1 முதல் 8-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.
இந்த கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியா்களுக்கு மாற்றுப் பணி அனுமதி வழங்கப்படாது. மாறாக தற்செயல் விடுப்பு எடுத்துக்கொண்டு கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும். வழிகாட்டுதல்களின்படி தகுதியானவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். மேலும், கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.