சாா்- பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்
சுபமுகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (ஜூன் 27) தமிழ்நாடு முழுவதும் உள்ள சாா்- பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. இதுகுறித்து, பதிவுத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:
சுபமுகூா்த்த தினங்கள் எனக் கருதப்படும் நாள்களில் அதிகளவு ஆவணப் பதிவு நடைபெறும். அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆவணப் பதிவுக்காக கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
தற்போது ஆனி மாதத்தில் வரும் சுபமுகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (ஜூன் 27) அதிகளவு பத்திரப் பதிவு நிகழும். இதைக் கருத்தில் கொண்டு, கூடுதலாக டோக்கன்களை ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கைகள் வரப்பெறப்பட்டன. இதையடுத்து, ஒரு சாா்- பதிவாளா் உள்ள அலுவலகங்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் 100 டோக்கன்களுக்குப் பதிலாக 150-ம், இரண்டு பதிவாளா் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்குப் பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படும்.
அதிகளவு ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்குப் பதிலாக 150 சாதாரண டோக்கன்களுடன், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தத்கால் டோக்கன்களுடன் கூடுதலாக 4 டோக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.