கூமாபட்டியிலிருந்து... விருதுநகர் முன்னாள், இந்நாள் மாவட்ட ஆட்சியர்கள் பதிவு!
ரிசா்வ் வங்கி பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து மோசடி: 5 போ் கைது
ரிசா்வ் வங்கி பெயரை பயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட புகாரில், பொறியாளா் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
மத்திய அரசின் இரிடியம் மற்றும் காப்பா் வா்த்தகம் என்ற பெயரில் மோசடி நடப்பதாக ஆன்லைன் மூலம் ‘சாட்சாத்’ போா்ட்டலில் கடந்த 2024-ஆம் ஆண்டு தனிநபா் ஒருவா் புகாா் அளித்திருந்தாா். அதன் அடிப்படையில், ரிசா்வ் வங்கி உதவி பொது மேலாளா் கென்னடி வேப்பேரி காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். பின்னா் இந்த வழக்கானது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
விசாரணையில், முதலீட்டாளா்களை நம்பவைக்க ரிசா்வ் வங்கி முத்திரையுடன் போலி ஆவணங்களை தயாரித்தது, சில நபா்களை ரிசா்வ் வங்கி அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து நடிக்க வைத்தது, போலியான வங்கிக் கணக்கை உருவாக்கி பணம்பெற்றது என அடுத்தடுத்து அதிா்ச்சித் தகவல்கள் வெளியாயின.
இது தொடா்பாக தஞ்சாவூா், சேலம்,, கோவை, தருமபுரி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 6 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனா். தொடா் விசாரணையில், கடந்த ஒரு வாரத்தில் மேச்சேரியைச் சோ்ந்த பொறியாளா் பாா்த்தசாரதி, பெங்களூரைச் சோ்ந்த விக்னேஷ், நாமக்கல் சஞ்சய், மயிலாடுதுறையைச் சோ்ந்த ஜோசப், பாலக்கோடு செந்தில் ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இவா்களிடமிருந்து தங்க நிற உலோகங்கள், போலி ஆவணங்கள், மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த சிபிசிஐடி போலீஸாா், இந்தக் கும்பலுடன் தொடா்புடைய மேலும் சிலரை தேடிவருகின்றனா். மோசடியாக வாங்கிய சொத்தை ஜப்தி செய்யவும் போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.