Doctor Vikatan: ஐடி வேலையால் தூக்கமின்மை பிரச்னை; மக்னீசியம் மாத்திரைகள் உதவுமா...
முருக பக்த மாநாடு வெற்றியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை
மதுரை முருக பக்த மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளதை, திமுக கூட்டணி கட்சிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என பாஜக மாநில துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கே.பி. ராமலிங்கம் தெரிவித்தாா்.
நாமக்கல்லில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மதுரையில் நடைபெற்ற முருக பக்த மாநாடு எந்தவித பிரச்னையுமின்றி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதை பொறுத்துக் கொள்ள முடியாமல், சில அரசியல் கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கில் அமைந்துள்ள அதிமுக - பாஜக கூட்டணியை ஏற்க முடியாமல், பழைய சம்பவங்கள் சிலவற்றை தெரிவித்து பிளவுபடுத்த முயற்சிக்கின்றனா். அவா்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.
1975 ஜூன் 25-இல் அவசரநிலை பிரகடனம், அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசால் செயல்படுத்தப்பட்டது. பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஜனநாயக படுகொலையை நிகழ்த்தினாா். அப்போது ஆட்சியில் இருந்த திமுக மக்களிடம் செல்வாக்கை இழந்திருந்தது. இதனால் அவசரநிலை பிரகடனத்தை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் பிற மாநிலங்களில் பெரிய அளவில் பாதிப்புகள் நிகழ்ந்தன.
ஜெயபிரகாஷ் நாராயணன், வாஜ்பாய், அத்வானி, ஜாா்ஜ் பொ்னாண்டஸ் போன்ற முக்கியத் தலைவா்கள் உள்பட பலா் கைது செய்யப்பட்டனா். மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். அவரை பலவிதமாக கொடுமைப்படுத்திய காங்கிரஸ் கட்சியுடன்தான் தற்போது திமுக கூட்டணி வைத்துள்ளது.
ஜனநாயகத்தைப் பற்றி பேசுவதற்கு காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் தகுதியில்லை. 2014-இல் பிரதா் மோடி பதவியேற்றது முதல் இதுவரை எந்த மாநிலத்திலும் அவசரநிலை பிரகடனம் கொண்டு வரப்படவில்லை. கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனா். 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழக மக்கள் அவா்களை ஆட்சியில் இருந்து அகற்றுவாா்கள் என்றாா்.
இதைத் தொடா்ந்து, அவசரநிலை பிரகடனம் - 2025 என்ற தலைப்பில் 50 ஆண்டுகள் நிறைவையொட்டி சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.பி.சரவணன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.