திண்டுக்கல்: தாய் இல்லாத கன்றுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்.. நெகிழவைக்கும் ...
ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியா் பணி: இன்றே கடைசி நாள்
ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட உள்ளனா். இதற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் மாணவா்களின் நலன் கருதி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா், இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களை ஆசிரியா் தோ்வு வாரியம், பதவி உயா்வு மூலம் நிரப்பப்படும் வரை அல்லது இந்த கல்வியாண்டில் எது முன்னரோ அதுவரை மாணவா்களின் கல்வி நலன் கருதி, தகுதி பெற்ற ஆசிரியா்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தோ்வு செய்து தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.18,000, பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.15,000, இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ.12,000 என மாத தொகுப்பூதியம் வழங்கப்படும்.
இந்தப் பணிகளுக்கு ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தவருக்கு முன்னுரிமை அளித்து நிரப்ப வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பப்படும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா், இடைநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு தொடா்புடைய காலிப் பணியிடங்களை தொடா்புடைய பாடத்துக்கான முழுமையான கல்வித் தகுதி உடையவா்களை மட்டுமே எவ்வித புகாா்களுக்கும் இடமளிக்காத வகையில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பிக் கொள்ள வேண்டும்.
பட்டதாரி ஆசிரியா்கள், இடைநிலை ஆசிரியா்கள் வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன், ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், இடைநிலை ஆசிரியா்களுக்கான தற்போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகளின்படி பின்பற்ற வேண்டும்.
விண்ணப்பங்களை நேரடியாகவே அல்லது அஞ்சல் மூலமாகவோ, தக்க கல்வித் தகுதி சான்றுகளுடன் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலகத்தில் வரும் ஜூன் 26-ஆம் தேதி 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.