ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடவில்லை; காரணம் என்ன?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியின்போது காயம் ஏற்பட்டது. இதனால், சொந்த மண்ணில் லக்னௌவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அவரால் விளையாட முடியாமல் போனது.
இதையும் படிக்க: அடுத்த சீசனுக்கான வலுவான பிளேயிங் லெவனை உருவாக்க வேண்டும்: எம்.எஸ்.தோனி
இந்த நிலையில், காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத காரணத்தால் பெங்களூருவுக்கு எதிரான அடுத்த போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடமாட்டார் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயத்திலிருந்து மீண்டு வருகிறார். அவரை எங்களது மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவர் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால், பெங்களூருவுக்கு எதிரான போட்டிக்காக அணியுடன் இணைந்து பெங்களூரு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அடுத்த சீசனை நோக்கி நகரும் சிஎஸ்கே: அம்பத்தி ராயுடு
பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை ரியான் பராக் கேப்டனாக வழிநடத்தவுள்ளார். இந்த போட்டியில் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக துருவ் ஜுரெல் களமிறங்கவுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 224 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.