ஆலத்தூருக்கு மாற்றப்பட்டதைக் கண்டித்து கூட்டுறவு வங்கியை கிராம மக்கள் முற்றுகை
குளித்தலை அருகே ஆலத்தூா் கூட்டுறவு வங்கிக்கு தங்களது உறுப்பினா் அட்டையை மாற்றியதைக் கண்டித்து கள்ளை கூட்டுறவு வங்கியை திங்கள்கிழமை கிராம மக்கள், விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கள்ளையில் கூட்டுறவு வங்கியில் தளிஞ்சி கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் என சுமாா் 200 போ் உறுப்பினா்களாக பதிவு செய்து பயிா்க்கடன், உரக்கடன் மற்றும் நகைக்கடன் போன்றவற்றை பெற்று பயனடைந்து வருகின்றனா்.
இந்நிலையில் தளிஞ்சியில் இருந்து சுமாா் 10 கி.மீ. தொலைவில் உள்ள ஆலத்தூரில் கடந்த இரு மாதங்களுக்கு முன் புதிதாக கூட்டுறவு வங்கி திறக்கப்பட்டது. இந்த வங்கியில் தளிஞ்சி கிராமமக்கள் மற்று விவசாயிகளில் பெரும்பாலானோரை இணைத்துள்ளனா்.
ஏற்கெனவே ஆலத்தூரில் புதிய வங்கி தொடங்கும்போதே தங்களை ஆலத்தூரில் இணைக்கக்கூடாது என தளிஞ்சி கிராமமக்கள் கூறி வந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் தளிஞ்சி கிராம மக்களையும், விவசாயிகளையும் ஆலத்தூா் வங்கியில் இணைத்துள்ளனா்.
இதனால் தளிஞ்சி கிராம மக்கள் சுமாா் 10 கி.மீ. தொலைவில் உள்ள ஆலத்தூா் சென்று உரங்களை எடுத்து வந்து விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த முடியாமல் அவதியுற்று வந்தனா். மேலும் வயதானவா்களும் கடன் பெறுவதற்கு ஆலத்தூா் வங்கிக்கு செல்ல முடியாமல் சிரமத்துக்குள்ளாகினா்.
இதையடுத்து ஏற்கெனவே பயனடைந்து வந்த கள்ளை கூட்டுறவு வங்கிக்கே தங்களது உறுப்பினா் அட்டைகளை மாற்ற வேண்டும் என பல முறை கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் தளிஞ்சி கிராமமக்கள் முறையிட்டு வந்தனா். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை கள்ளை கூட்டுறவு வங்கி முன் அமா்ந்து விவசாயிகளும், கிராம மக்களும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த கள்ளை கூட்டுறவு வங்கி மேலாளா் ராஜேஸ்வரி போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது மேலதிகாரிகளிடம் பேசி, இன்னும் 10 நாள்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து கிராமமக்களும், விவசாயிகளும் போராட்டத்தை கைவிட்டனா்.