இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வருண் சக்ரவர்த்தி!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி இடம்பெற்றுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 தொடர் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி வருகிற 6 ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது.
இந்தத் தொடருக்கான இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தியும் இடம்பெற்றுள்ளதை துணைக் கேப்டன் சுப்மன் கில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இந்திய அணியின் வலைப் பயிற்சியில் வருண் ஈடுபட்டார்.
இதையும் படியுங்கள்... இலங்கை தொடரில் விளையாடாமல் தாயகம் திரும்பும் சாம் கான்ஸ்டாஸ்; காரணம் என்ன?
வருகிற 19 ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடங்கவிருக்கும் வேளையில் வருண் சக்ரவர்த்தி இந்திய அணியுடன் இணைந்திருப்பது அவர் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறுவாரா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
குல்தீப் யாதவ் காயத்தில் இருந்து மீண்டு வருவது மற்றும் ஜஸ்பிரித் பும்ராவின் காயம் ஆகியவை இந்திய அணிக்குப் பின்னடைவாக இருந்தாலும், வருண் சக்ரவர்த்தி இடம் பிடிப்பது குறித்து அணித் தேர்வர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் மாற்றம் செய்ய 12 ஆம் தேதி வரை நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. வருண் சக்ரவர்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவருக்கும் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.