கேரவனில் நடந்த துயரம்..! மீட்சியடைந்த தருணம் குறித்த பேசிய தமன்னா!
நடிகை தமன்னா தனது கேரவனில் நடந்த துயரத்தில் இருந்து எப்படி மாறினேன் என அதன் முக்கியத்துவம் குறித்தும் பேசியுள்ளார்.
சமீபத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமன்னா அதில் பேசியதாவது:
நான் எனது கேரவனில் (நடிகைகளின் ஒப்பனை, ஓய்வறை) இருக்கும்போது எனக்கு விரும்பத்தகாதது நடந்தது. அதனால் மிகவும் வருத்தமடைந்தேன். எனது கண்கள் குளமாகின. நான் கண்ணிமைகளுக்கு மஸ்காராவும் (கண்ணிமை மயிர்களுக்குச் சாயம் ஊட்டுவதற்கான கலவை மருந்து) முகம் முழுக்க ஒப்பனையுடனும் இருந்தேன்.
நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும். அதனால் அப்போது அழ முடியாது. அப்போது எனக்கு நானே ’இது ஒரு உணர்ச்சிதான். இதை நான் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்’ என சொல்லிக்கொண்டேன். பின்னர் இந்தக் கடினமான உணர்ச்சியை மகிழ்ச்சியாக மாற்றிக்கொண்டேன். பின்னர் என்னை நானே நிலைக் கண்ணாடியில் பார்த்தேன், அது நிச்சயமாக எனக்கு வேலை செய்தது என்றார்.
தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என பலருக்கும் ஜோடியாக நடித்துவிட்டார் தமன்னா. ரஜினிகாந்த்துடன் இணைந்து 'ஜெயிலர்' படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடி அனைவரையும் கவர்ந்தார்.
தமன்னா சமீபத்தில் நெட்பிளிக்ஸில் சிக்கந்தர் கா முகாதுர் என்ற படத்தில் நடித்திருந்தார். ஸ்ட்ரீ-2 படத்தில் ஆஜ் கி ராட் என்ற பாடலில் நடனமாடியிர்ந்தார். இந்தப் பாடல் 78 கோடி (780 மில்லியன்) பார்வைகளைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.
அசோக் தேஜா இயக்கத்தில் ஒடேலா 2 படத்திலும் தமன்னா நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சிவ சக்தியாக நடித்துள்ளார். தமிழில் கடைசியாக அரண்மனை 4 படத்தில் நடித்திருந்தார்.