”இந்தித் திணிப்பை ஆதரிப்பவர்கள் தமிழகத்திற்கு துரோகம் செய்வதாக அர்த்தம்” - அமைச்சர் எ.வ.வேலு
கும்பகோணம் அருகே வளையப்பேட்டையில் உள்ள கலைஞர் கோட்டத்தை ஆய்வு செய்த நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது, "நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழகத்தில் அரசியலுக்கு, அப்பாற்பட்டு ஒட்டு மொத்தமாக ஒரே குரலாக இருக்க வேண்டும். தமிழகத்திற்கு இருமொழிக் கொள்கை தான் ஒத்து வரும், மூன்றாவது மொழி என்பது அவரவர் விருப்பத்திற்கேற்ப கற்றுக்கொள்வதில் மாற்றம் இல்லை.

தமிழகத்தில் மலையாளம், கன்னடம், தெலுங்கு படிக்கக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் கூறவில்லை. இந்தி மொழியைத் திணிக்க வேண்டாம் என்று தான் கூறுகிறோம். இந்தி திணிப்பு என்பது வேறு, இந்தி மொழியைக் கற்றுக் கொள்வது வேறு. தமிழக முதல்வரும், எந்த மொழிக்கும் நாங்கள் எதிரிகள் இல்லை என்கிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை தாய்மொழி தமிழும், இணைப்பு மொழியாக ஆங்கிலமும் இருக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து அதிகமான பொறியாளர்கள் ஆங்கிலத்தில் படித்து, இணைப்பு மொழியாக கற்று, பல்வேறு நாடுகளில் பணியாற்றுவதால் தான், இந்தியப் பொருளாதாரம் வளர்ந்திருப்பதற்கு காரணமாகும்.
ஆனால், இந்தியைப் படித்து விட்டு வெளிநாடுகளில் என்ன செய்வது. சில அரசியல் வீணர்கள் அரசியல் சூழ்நிலைக்காக பேசிக்கொண்டிருப்பார்கள். யாராவது ஒருத்தர் இந்தி திணிப்பை ஆதரிக்கின்றார்கள் என்றால், அவர்கள் தமிழகத்திற்கு துரோகம் செய்கிறார்கள் என்பது தான் அர்த்தம். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பொய்யைப் பரப்புவதற்காகத் தான் அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்டுகிறார் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறுவது அரசியலுக்காக தான். அவர் பா.ஜ.கவில் இருந்து கொண்டு வேறு என்ன சொல்ல முடியும்" என்றார்.