அமைச்சர் ஜெய்சங்கருடன் பெல்ஜியம் இளவரசி சந்திப்பு!
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பெல்ஜியம் இளவரசியை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(மார்ச் 3) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினரான பெல்ஜியம் நாட்டின் இளவரசி ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகள் குழுவினருடன் ஒரு வாரம் அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு கடந்த மார்ச் 1-ஆம் தேதி வந்தடைந்தார்.
அவர் மார்ச் 8 வரை இங்கு தங்கியிருந்து இருநாடுகளுக்கிடையே உள்கட்டமைப்பு, வர்த்தகம், பசுமை எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் உறவை மேம்படுத்துவதற்காக பல்வேறு கட்ட ஆலோசனைகளை அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த நிலையில், பெல்ஜியம் இளவரசி ஆஸ்ட்ரிட் வெளியுறவு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் இன்று(மார்ச் 3) ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகள் குழுவினர் உடனிருந்தனர்.

அதேபோல, அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல் ஆகியோரையும் பெல்ஜியம் இளவரசி ஆஸ்ட்ரிட் சந்தித்து பேசினார்.