திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கு சென்றாலே பாதுகாப்பு இல்லை- நயினார் நாகேந்திர...
இந்தியாவில் தடுப்பூசி பெறாத குழந்தைகளின் விகிதம் சரிவு: ஐ.நா. அறிக்கை
இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் தடுப்பூசி பெறாத (ஜீரோ டோஸ்) குழந்தைகளின் விகிதம் 2023-ஆம் ஆண்டின் 0.11 சதவீதத்திலிருந்து 2024-இல் 0.06 சதவீதமாகக் குறைந்துள்ளது.
குழந்தை இறப்பு மதிப்பீட்டுக்கான ஐ.நா. குழு வெளியிட்ட 2024-ஆம் ஆண்டு அறிக்கையின்படி குழந்தைகளின் ஆரோக்கியத்தில் இந்தியா உலகளாவிய முன்மாதிரியாக மாறியுள்ளதாகவும், அரசின் முன்முயற்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையால் இது சாத்தியமாகியுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின்படி ‘டிடிபி’ தடுப்பூசியின் முதல் தவணையைக்கூட பெறாத குழந்தைகள், ‘ஜீரோ டோஸ் குழந்தைகள்’ என்று அறியப்படுகின்றனா். இத்தகைய குழந்தைகளின் எண்ணிக்கையைத் தொடா்ந்து குறைக்கும் நோக்கில் உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டத்தின்(யுஐபி) மூலம் ஆண்டுதோறும் 2.9 கோடி கா்ப்பிணிப் பெண்களுக்கும், ஒரு வயதுக்குட்பட்ட 2.6 கோடி குழந்தைகளுக்கும் இலவச தடுப்பூசி சேவைகளை வழங்குவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இதுதொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தடுப்பூசி என்பது மக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த, மலிவான வழிகளில் ஒன்றாக உள்ளது. அந்த வகையில், பின்தங்கிய மக்களுக்கும் தடுப்பூசி சென்றடைய அரசு அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. சுகாதாரத் துறை மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள், நாடு முழுவதும் 1.3 கோடி தடுப்பூசி இயக்கங்களை நடத்துகின்றனா்.
இத்தகைய தொடா்ச்சியான, நீடித்த முயற்சிகள் மற்றும் தீவிரமான செயல்படுத்துதல் ஆகியவற்றின் விளைவாக, மொத்த மக்கள்தொகையில் தடுப்பூசி பெறாத குழந்தைகளின் விகிதம் 2023-இன் 0.11 சதவீதத்திலிருந்து 2024-இல் 0.06 சதவீதமாகக் குறைந்துள்ளது.
வயிற்றுப்போக்கு, நிமோனியா, மூளைக்காய்ச்சல் ஆகியவற்றால் குழந்தைகளின் இறப்பு மற்றும் நோய் பாதிப்பைக் குறைப்பதில் தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதன் பங்கு தெளிவாகக் காணப்படுகிறது.
உதாரணமாக, 1990-ஆம் ஆண்டுமுதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தில் உலகளாவிய சராசரியான 54 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், இந்தியா 78 சதவீத சரிவை எட்டியுள்ளது. இதேபோன்று, மகப்பேறு இறப்பு விகிதத்தின் உலகளாவிய சராசரியான 48 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், இந்திய விகிதம் 86 சதவீதம் குறைந்துள்ளது. இவை சம்பந்தப்பட்ட ஐ.நா. அறிக்கைகளில் இந்தத் தரவுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் தடுப்பூசி பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க, தடுப்பூசி திட்டங்களை அரசு தொடா்ந்து மேம்படுத்தி வருகிறது. நடப்பு ஆண்டிலும் தொடா்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
தடுப்பூசி பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், இந்தியாவின் யுஐபி திட்டமானது உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த தடுப்பூசிகளுக்கு விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது.
கடந்த 2013-ஆம் ஆண்டு வரை, யுஐபி திட்டத்தில் 6 தடுப்பூசிகள் மட்டுமே இருந்தன. தற்போது அந்தத் திட்டம் 12 தடுப்பூசிகளை உள்ளடக்கி, குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைக் கண்டுள்ளது’ என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.