இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பெயர் மாற்றம்..!
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் போட்டிகள் பார்டர் - கவாஸ்கர் டிராபி என அழைக்கப்படுகின்றன. அதேபோல், இந்தியா- இங்கிலாந்து அணிக்கும் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக இரு அணிகளுக்காமன டெஸ்ட் போட்டிகள் இங்கிலாந்தில் விளையாடும்போது பட்டோடி டிராபி என்றும் இந்தியாவில் விளையாடும்போது அந்தோனி டீ மெல்லோ டிராபி என்றும் அழைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், இரு நாட்டு அணிகளின் ஜாம்பவான்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், சச்சின் டெண்டுல்கரை கௌரவிக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின்போது (ஜூன்.11) இந்தப் பெயரை சச்சினும் ஆண்டர்சனும் இணைந்து அறிவிக்க உள்ளதாக கிரிகின்ஃபோ தெரிவித்துள்ளது.
புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான சுழற்சியில் இந்தியாவும் இங்கிலாந்தும் முதல்முறையாக மோதவிருக்கின்றன.
5 போட்டிகள் கொண்ட தொடர் ஜூன் 20ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கின்றன. ஷுப்மன் கில் இந்தியாவுக்கு கேப்டனாக செயல்படுகிறார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன்
இங்கிலாந்தின் தலைசிறந்த வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 704 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.
சமீபத்தில் ஓய்வை அறிவித்த ஆண்டர்சன் தற்போதும் ஃபிட்டாக இருப்பதால் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
சச்சின் டெண்டுல்கர்
இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15,921 ரன்கள் குவித்துள்ளார்.
சசிசின் 2013இல் ஓய்வை அறிவித்த அவர் சில ஆண்டுகள் ஐபிஎல் விளையாடினார். பின்னர், அதிலும் ஓய்வு பெற்றார். தற்போது லெஜெண்ட்ஸ் லீக்கில் மட்டுமே விளையாடுகிறார்.