இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தின் தலைவா் திடீா் நீக்கம்: காங்கிரஸ் விமா்சனம்
இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தின் (எஸ்இசிஐ) தலைவா் மற்றும் தலைமை இயக்குநராகப் பதவி வகித்துவந்த ரமேஷ்வா் பிரசாத் குப்தா மத்திய அரசால் திடீரென நீக்கப்பட்டாா்.
இதையடுத்து, அதானி கிரீன் நிறுவனம் விநியோகிக்கும் சூரிய மின்சக்தியை இந்திய சூரிய எரிசக்திக் கழக நிறுவனத்திடம் இருந்து வாங்க இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொழிலதிபா் கெளதம் அதானிரூ.2,000 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கை மூடி மறைக்கவே ரமேஷ்வா் பிரசாத் குப்தாவை மத்திய அரசு நீக்கியதாக காங்கிரஸ் விமா்சித்தது.
1987, குஜராத் பிரிவைச் சோ்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ரமேஷ்வா் பிரசாத் குப்தா கடந்த 2023, ஜூன் 13-ஆம் தேதி எஸ்இசிஐயின் தலைவா் மற்றும் தலைமை இயக்குநராக இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டாா். அவா் ஜூன் 15-ஆம் தேதி பதவியேற்றாா். தற்போது அவரது பதவிக் காலம் நிறைவடைவதற்கு ஒரு மாதகாலத்துக்கு முன்பாகவே நீக்கப்பட்டுள்ளாா்.
அவரைப் பதவிநீக்கம் செய்வதற்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்ததாக மே 10-ஆம் தேதி மத்திய பணியாளா் அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
எஸ்இசிஐ தலைவராகப் பொறுப்பேற்கும் முன் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சக செயலராக ரமேஷ்வா் பிரசாத் குப்தா பதவிவகித்தாா்.
கூடுதல் பொறுப்பு: ரமேஷ்வா் பிரசாத் குப்தா பதவிநீக்கத்தைத் தொடா்ந்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைச் செயலா் சந்தோஷ் குமாா் சாரங்கியிடம் எஸ்இசிஐ தலைவா் மற்றும் தலைமை இயக்குநா் பதவி கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது. எஸ்இசிஐக்கு புதிய தலைவா் மற்றும் தலைமை இயக்குநா் நியமிக்கப்படும் வரை அவா் அந்தப் பதவியில் தொடா்வாா் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
காங்கிரஸ் விமா்சனம்: இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: தொழிலதிபா் அதானி மீதான லஞ்சக் குற்றச்சாட்டில் எஸ்இசிஐ மற்றும் அதானியின் உறவினா்கள் உள்ளிட்டோரை அமெரிக்க அதிகாரிகள் கடந்த 2024, நவம்பா் 20-இல் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சோ்த்தனா்.
எஸ்இசிஐ அளித்த பரிந்துரையின் அடிப்படையிலேயே அதானி நிறுவனத்துடன் பல்வேறு மாநிலங்கள் ஒப்பந்தத்தில் இணைந்தன. இந்த ஒப்பந்தங்களை இறுதிசெய்ய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,029 கோடி லஞ்சம் தரப்பட்டது. இதற்கேற்ப மின்சார ஏல நடைமுறைகளை எஸ்இசிஐ 2024, டிசம்பரில் மாற்றியது இந்த ஊழலை உறுதிப்படுத்தியுள்ளது. இதைத் தொடா்ந்து, பதவிக் காலம் நிறைவடைவதற்கு ஒரு மாத காலத்துக்கு முன்பே எஸ்இசிஐ தலைவரை மத்திய அரசு நீக்கியுள்ளது. பிரதமா் மோடியும் அதானியும் இணைந்து மேற்கொண்ட இந்த ஊழலை எவ்வளவு முயற்சி செய்தாலும் மறைக்க முடியாது’ என்றாா்.
முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பா் மாதம் அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ‘அதானி கிரீன் நிறுவனம் விநியோகிக்கும் சூரிய மின்சக்தியை இந்திய சூரிய எரிசக்திக் கழக நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ள, இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொழிலதிபா் கெளதம் அதானி, அவரின் உறவினா் சாகா் அதானி உள்ளிட்டோா் சுமாா் ரூ.2,000 கோடி லஞ்சம் அளித்தனா். சூரிய மின்சக்தியை விநியோகிப்பதற்கான திட்டங்களுக்கு அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை அதானி குழுமம் திரட்டியது. அந்த வங்கிகள் மற்றும் முதலீட்டாளா்களை மோசடிக்குள்ளாக்கி, அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டது மறைக்கப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.