இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்களிடம் வழிப்பறி: பெண்கள் அச்சம்
ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்களிடம் தங்கச் சங்கிலியை பறிக்கும் வழிப்பறி கொள்ளையர்களால் பெண்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அடுத்த அம்பூர்பேட்டை பகுதியை சேர்ந்த ஷீலா(60) மற்றும் அவரது மருமகள் சிந்து ஆகியோர் வியாழக்கிழமை மாலை ஆம்பூரில் நடைப்பெற்ற உறவினர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பின்னால் இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் ஷீலா அணிந்திருந்த பத்து பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து ஷீலா படுகாயம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னையில் மருத்துவர், வழக்குரைஞர் உள்பட 4 பேர் தற்கொலை: காரணம் என்ன?
சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், வழிப்பறி சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தங்கச் சங்கிலியை பறித்துச்சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து ஆம்பூர்-வாணியம்பாடி, பெங்களூரு-சென்னை மற்றும் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்போன் மற்றும் நகை வழப்பறி கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், ரோந்து போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் இதுபோன்ற வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் நபர்களை நிறுத்தி சோதனை செய்வதை தவிர்த்து, அன்றாட பணிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் கனரக வாகனங்களை நிறுத்தி சோதனை செய்வதிலேயே முக்கியத்துவம் அளித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆம்பூர் பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் வரும் பெண்களிடம் தங்கச் சங்கிலியை பறிக்கும் வழிப்பறி கொள்ளையர்களால் பெண்கள் அச்சமடைந்துள்ளனர்.