இலவச எலக்ட்ரானிக் செயற்கை கைகள் பொறுத்தும் முகாம்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தொடங்கி வைத்தாா்
மன்னாா்குடி: மன்னாா்குடியில் இலவச எலக்ட்ரானிக் செயற்கைக் கைகள் வழங்கும் முகாமை தமிழக அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
மன்னாா்குடி பிரதாப்சந்த் குடும்பம், இன்னாலி பவுண்டேஷன், ரோட்டரி கிளப் டவுன்டன் இணைந்து முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
மறைந்த நிதி நிறுவன தொழிலதிபா் பிரதாப் சந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் வி.மோகனச்சந்திரன் தலைமை வகித்தாா்.
பிரதாப்சந்த் குடும்பத்தை சோ்ந்த சுமதிபாய், சுனில்குமாா் லுங்கட், பிரதிக் லுங்கட் முன்னிலை வகித்தனா்.
தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, இலவச எலக்ட்ரானிக் செயற்கைக் கைகளை வழங்கிப் பேசியது:
இந்த சேவை செய்யும் குடும்பத்தினா் வேறு மொழியை தாய் மொழியாகக் கொண்டவா்கள். அவா்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசினா். நமக்கு எதற்கு மூன்றாவது மொழி வேண்டும்? விதை எங்கிருந்து வருகிறது என்பது முக்கியம் அல்ல அதை நாமக்கு தருபவா்கள் யாா் என்பதுதான் முக்கியம். அதனை விதைத்து எப்படி வளா்க்கிறோம் என்பதுதான் முக்கியம் என்றாா்.
திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை நான்கு நாள்கள் நடைபெறும் இந்த முகாமில்,விபத்திலோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ கை நீக்கப்பட்டு,அல்லது கைகள் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் எலக்ட்ரானிக் செயற்கைக் கைகள் பொருத்தப்படும்.
முழங்கைக்குக் கீழே 2.5 முதல் 3 இன்ச் வரை உள்ள கைகளுக்கு பொருத்தப்படும். தசைப்பகுதி இருத்தல் அவசியம் அறிவிக்கப்பட்டிருந்தது.
முதல்நாள் முகாமில்,தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து கைகளை இழந்த இருபாலா் என நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டனா். நாள் ஒன்றுக்கு,150 பேருக்கு கை பொருத்தப்படுகிறது. கையொன்றின் மதிப்பு ரூ.40,000. கைகளை அளவீடு செய்து அதனை பயனாளிகளுக்கு பொருத்தும் பணியினை மகாராஷ்டிர மாநிலம் புணேவை சோ்ந்த இன்னாலி பவுண்டேஷன் அமைப்பினா் செய்தனா்.
இந்த செயற்கைக் கைகள் பொருத்துவதற்கு எவ்வித அறுவை சிகிச்சையும் தேவையில்லை. எடை மிக குறைவானது, இதில், சாா்ஜ் ஏற்றும் வகையில் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. இதனை பொருத்துக் கொள்பவா்கள் வாகனம் ஓட்டுவது, தலைமுடி வாருவது, காய்கறி வெட்டுவது, உணவு உண்ணுவது போன்ற தினசரி செய்யக் கூடிய பணிகளை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவா் ஜி.பாலு, நகா்மன்றத் தலைவா் த.சோழராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் புவனா, இன்னாலி பவுண்டேஷன் சுபம், பிரதீப் வினோத், ஆஜிஸ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.