செய்திகள் :

இஸ்ரேல்-ஈரான் மோதலை நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்

post image

இஸ்ரேலும் ஈரானும் தங்களுக்கு இடையிலான மோதலை நிறுத்த வேண்டும் என்று ஜி7 நாடுகள் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

காஸா போர் நிறுத்தம் உள்பட ஈரான் பிரச்னைக்குக் காணப்படும் தீர்வானது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பரந்த அளவில் பகைமையைக் குறைக்க வழிவகுக்கும் என்று அந்தக் கூட்டமைப்பு தெரிவித்தது.

ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதிய இஸ்ரேல், ஈரானுடன் மோதலில் ஈடுபட்டு வருகிறது. அதேவேளையில், ஈரான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் தடுக்க, அந்நாடு அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், கனடா தலைமையில் அந்நாட்டில் உள்ள ஆல்பர்ட்டா மாகாணம் கனானாஸ்கிஸ் பகுதியில் 2 நாள்கள் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாடு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள அந்தக் கூட்டமைப்பின் மாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜெர்மனி பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகியோர் பங்கேற்றனர்.

அதேவேளையில், கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின்பேரில் ஜி7 கூட்டமைப்பைச் சேராத இந்திய பிரதமர் மோடி மற்றும் பிற நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

உலக அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைக் குறைக்க உதவும் நோக்கில், இந்த மாநாட்டில் உலகத் தலைவர்கள் ஒன்றுகூடினர். அப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் தொடங்கும் முன், அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஈரானுக்கு 60 நாள்கள் அவகாசம் இருந்தது. ஆனால், ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரான் தவறிவிட்டது. மிகவும் தாமதமடைவதற்குள் தனது அணுசக்தி திட்டத்தை ஈரான் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். மோதலை நிறுத்த இஸ்ரேலும், ஈரானும் உடனடியாக பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்றார்.

பிரிட்டன் பிரதமர்...: பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் கூறுகையில், "இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது மத்திய கிழக்கு பிராந்தியத்தை மட்டுமே பாதிக்கக் கூடியதாக இல்லை. அது உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அந்த மோதலைத் தணிக்க வேண்டும் என்பதில் ஜி7 தலைவர்களின் கவனம் உள்ளது' என்றார்.

ஜி7 கூட்டறிக்கை: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதி ஏற்பட வேண்டும் என்பதில் ஜி7 தலைவர்கள் உள்ளார்ந்த ஈடுபாடு கொண்டுள்ளனர். அதேவேளையில், தன்னை தற்காத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஜி7 தலைவர்கள் ஆதரவு அளிக்கின்றனர்.

மத்திய கிழக்கில் ஸ்திரமற்ற நிலைக்கும், பயங்கரவாதத்துக்கும் ஈரான் பிரதான காரணமாக உள்ளது. ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதே ஜி7 தலைவர்களின் நிலைப்பாடு.

காஸா போர் நிறுத்தம் உள்பட ஈரான் பிரச்னைக்குக் காணப்படும் தீர்வானது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பரந்த அளவில் பகைமையைக் குறைக்க வழிவகுக்கும் என்பது ஜி7 தலைவர்களின் அறிவுறுத்தலாகும் என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ரஷியா, சீனாவை சேர்க்க பரிந்துரை: ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த 2014-ஆம் ஆண்டு உக்ரைனின் கிரீமியா பகுதியை ரஷியா ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக்கொண்டது. அதன் பின்னர் ஜி8 கூட்டமைப்பில் இருந்து ரஷியா நீக்கப்பட்டு, அந்தக் கூட்டமைப்பு ஜி7-ஆக மாறியது. கூட்டமைப்பில் இருந்து ரஷியா நீக்கப்பட்டது பெருந்தவறு. கூட்டமைப்பில் ரஷியாவையும், சீனாவையும் சேர்த்துக்கொள்ளலாம்' என்றார்.

"ஈரான் சரணடைய வேண்டும்'

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், "ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி எங்கு மறைந்திருக்கிறார் என்பதை அமெரிக்கா நன்கு அறியும். அவரை நாங்கள் இப்போதைக்கு கொல்லப்போவதில்லை. அதுபோல, ஈரான் மக்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படுவதையும் நாங்கள் விரும்பவில்லை. எனவே, ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்' என்று குறிப்பிட்டார்.

பாதியில் நாடு திரும்பிய டிரம்ப்

ஜி7 உச்சி மாநாடு நிறைவடைவதற்கு முன்பே அமெரிக்கா புறப்பட்ட அதிபர் டிரம்ப், விமானத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் நிறுத்தப்பட வேண்டும் என்று மட்டுமே நான் எதிர்பார்ப்பதாக கூறவில்லை. அணுசக்தியை செறிவூட்டும் நடவடிக்கைகளை ஈரான் முழுமையாகக் கைவிட வேண்டும். அந்நாட்டின் அணுசக்தி பிரச்னைக்கு உண்மையான முடிவு வேண்டும். ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக் கூடாது.

இஸ்ரேல்-ஈரான் மோதலை நிறுத்துவதற்கும், நான் அமெரிக்காவுக்கு பாதியில் திரும்புவதற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. நான் அமெரிக்கா திரும்புவதற்கு அதைவிட பெரிய காரணம் உள்ளது என்று தெரிவித்தார்.

இஸ்ரேலுடன் இணைந்து தாக்க அமெரிக்கா திட்டம்?

ஜி7 உச்சி மாநாட்டில் இருந்து அதிபர் டிரம்ப் முன்கூட்டியே திரும்பியது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது: ஈரானில் நிலத்துக்கு அடியில் உள்ள முக்கிய அணுசக்தி தளங்களை அழிக்கும் முயற்சியில் இஸ்ரேலுடன் இணைந்து தாக்குதலில் ஈடுபடுவதா? அல்லது அணு ஆயுதத்தை உருவாக்கும் ஈரானின் திறனை குறைக்கும் முயற்சியில், அந்நாட்டை ராஜ ரீதியில் தொடர்புகொண்டு வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதா? என்பது குறித்து முடிவு எடுக்கவே டிரம்ப் முன்கூட்டியே திரும்பினார் என்று தெரிவித்தனர்.

மீண்டும்.. மீண்டுமா..? சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒத்திவைப்பு!

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸிம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீ... மேலும் பார்க்க

இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்: ஈரானில் 565 பேர் பலி!

இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த கிட்டத்தட்ட 600 பேர் கொல்லப்பட்டனர்.மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய சண்டை 6-வது நாளாக புதன்கிழமையு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவத் தளபதியைச் சந்திக்கும் டிரம்ப்! பின்னணி என்ன?

பாகிஸ்தான் ராணுவத் தளபதியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரைத் தொடர்ந்து, தற்போது மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும்... மேலும் பார்க்க

தெஹ்ரான்: எண்ணெய் கிடங்கு, சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்!

ஈரான் தலைநகரான தெஹ்ரானுக்கு அருகிலுள்ள கச்சா எண்ணெய் கிடங்கு, சுத்திகரிப்பு நிலையங்களை இஸ்ரேல் குறிவத்து தாக்கி வருகிறது.மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி... மேலும் பார்க்க

காஸா: உணவுக்காக காத்திருந்த 45 போ் சுட்டுக் கொலை

காஸாவின் கான் யூனிஸ் நகரில் உணவுப் பொருள்களை வாங்குவதற்காக செவ்வாய்க்கிழமை காத்திருந்த 45 பாலஸ்தீனா்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.இந்தப் படுகொ... மேலும் பார்க்க

மத்திய கிழக்கில் விமான நிலையங்கள் மூடல்

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் விமான நிலையங்கள் மூடப்பட்டன. இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் மேலும் விரிவடையக் கூடும் என்ற அச்சத்தில், விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஏராளமான... மேலும் பார்க்க