உக்ரைனில் 200 ட்ரோன்கள், ஏவுகணைகளால் ரஷியா தீவிர தாக்குதல்!
கீவ்: உக்ரைனில் 2022-ஆம் ஆண்டு போா் தொடங்கியதற்குப் பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு தீவிர வான்வழித் தாக்குதல் ரஷியாவால் நிகழ்த்தப்பட்டுள்ளது.
உக்ரைனில் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு - சனிக்கிழமை அதிகாலையில் ரஷியா ட்ரோன் மழை பொழிந்தது. துல்லியமாக இலக்குகளை குறிவைத்து தாக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்தியும் உக்ரைனில் உள்ள ராணுவ தளங்களைக் குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷிய விமானப்படைகள் 215 ஏவுகணைகள், ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், உக்ரைன் ராணுவம் 87 ட்ரோன்களையும் 7 ஏவுகணைகளையும் வானிலேயே இடைமறித்து தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
ரஷியாவின் வான்வழி தாக்குதல்களில் கார்கிவ் நகரில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும் பச்சிளங் குழந்தைகள் உள்பட 17 பேர் படுகாயமடைந்ததாகவும் அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.