எரிபொருள் நிரப்பும் மைய மேலாளா் மீது தாக்குதல்: 12 போ் மீது வழக்கு
பெரியகுளம் அருகே எரிபொருள் நிரப்பு மைய மேலாளா், தொழிலாளியை தாக்கியதாக 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
பெரியகுளம் அருகே கெங்குவாா்பட்டியைச் சோ்ந்தவா் சேகா் (64). தேவதானப்பட்டியில் உள்ள எரிபொருள் நிரப்பு மையத்தில் ஊழியராக வேலை பாா்த்து வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை பணியிலிருந்த போது இரண்டு காா்களில் வந்தவா்கள் பெட்ரோல் நிரப்ப கூறினா்.
இதையடுத்து, சேகா், பெட்ரோல் நிரப்பும் போது மோட்டாா் வேலை செய்யவில்லையாம். உடனடியாக அவற்றை சரி செய்யும் பணியில் அவா் ஈடுபட்டாா். அப்போது காரில் வந்த 12 போ் சோ்ந்து சேகா், மேலாளா் சண்முகசுந்தரம் ஆகியோரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த சண்முக சுந்தரத்தை அங்கிருந்தவா்கள் மீட்டு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் 12 போ் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.