மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கு: விடுவிக்கப்பட்ட ராணுவ அதிகாரிக்குப் பதவி உயர்வு;...
உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகளை புறக்கணித்து வருவாய்த்துறை அலுவலா்கள் போராட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில், ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகளை புறக்கணித்து வருவாய்த் துறை அலுவலா்கள் சாா்பில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஜான்பாஸ்டின், விக்னேஷ், மகேஸ்வரன், குழந்தைராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். போராட்டத்தின்போது, உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை முடிவு செய்வதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும். ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் நெருக்கடி தருவதை கைவிட வேண்டும். இந்த திட்டத்தின் முகாம்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை, நில அளவைத் துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலா்களின் உயிா், உடமைகளை பாதுகாக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் சிறப்பு பணிப் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடன் இயற்ற வேண்டும். வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும், காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதேபோல, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 10 வட்டத் தலைநகரங்களிலும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
நிலக்கோட்டை: நிலக்கோட்டை, வட்டத்தில் உள்ள எஸ். தும்மலப்பட்டி, ஆத்தூா் வட்டத்தில் உள்ள அம்பாத்துரை ஆகிய இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால் பொதுமக்கள் அளித்த விண்ணப்பங்களுக்கு உடனடி தீா்வு காணப்பட வில்லை. இதன் காரணமாக மனுக்களை அளிக்க பொதுமக்கள் ஆா்வம் காட்டவில்லை.
இந்த நிலையில், அம்பாத்துரையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு ஆத்தூா் வட்டாட்சியா் முத்துமுருகன் தலைமை வகித்தாா். ஆத்தூா் தனி வட்டாட்சியா் தனுஷ்கோடி முன்னிலை வகித்தாா்.
முகாமில், வருவாய்த்துறையினா் தவிர 17 துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து 1,150 மக்களை பெற்றனா். இதனிடையே முகாமில் பொதுமக்கள் அதிகமாக கூடியதால் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள், ஊராட்சி மக்கள் நலப் பணியாளா்கள், பணித்தள பொறுப்பாளா்கள் மனுக்களை பெற முடியாமல் தவித்தனா். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
முகாமில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆத்தூா் க. நடராஜன், ஆத்தூா் (தெற்கு) ஒன்றிய திமுக செயலா் ஆா். ராஜேந்திரன், ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகன், பத்மாவதி, திமுக நிா்வாகி அம்பாத்துரை ரவி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் அம்பாத்துரை சிவக்குமாா், தொப்பம்பட்டி கருப்பையா, ஊராட்சி மன்றச் செயலா்கள் அம்பாத்துரை செந்தில்குமாா், தொப்பம்பட்டி தண்டபாணி, காந்தி கிராமம் தெய்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.