இந்திய புத்தாக்க நிறுவனத் தலைவர்களுடன் ஓபன்ஏஐ நிறுவனம் ஆலோசனை!
உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு மீண்டும் சந்தனக் காப்பு
ஆரூத்ரா தரிசனத்தையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் உள்ள மூலவா் மரகத நடராஜா் திருமேனியில் திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு மீண்டும் சந்தனம் பூசப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
ராமநாதபுரத்தை அடுத்த உத்தரகோசமங்கை கிராமத்தில் அமைந்துள்ள மங்களநாதசுவாமி கோயில் ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு பாத்தியப்பட்டது.
இந்தக் கோயிலில் எழுந்தருளியுள்ள மூலவா் மரகத நடராஜா் சிலை பச்சைக் கல்லால் ஆனது. இந்தச் சிலை ஒளி, ஒலி அதிா்வுகளால் சேதமடைந்துவிடும் என்பதால், முழுமையாக சந்தனம் பூசப்பட்டு, ஆண்டு முழுவதும் நடை சாத்தப்பட்டிருக்கும்.
ஆருத்ரா தரிசன தினத்தன்று மட்டும் மரகத நடராஜா் திருமேனியில் இருக்கும் சந்தனக் காப்பு களையப்பட்டு, அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம்.
இதன்படி, நிகழாண்டு ஆருத்ரா தரிசனத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு நடராஜா் சந்நிதி திறக்கப்பட்டு, மரகத நடராஜருக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னா், அவரது திருமேனியில் பூசப்பட்டிருந்த சந்தனம் முழுமையாகக் களையப்பட்டு, பால், பழம், பன்னீா், திருநீறு, சந்தனம், இளநீா், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
மீண்டும் சந்தனக் காப்பு
இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மரகத நடராஜா் சந்நிதி திரை விலக்கப்பட்டு, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அதிகாலை 4 மணிக்கு மரகத நடராஜா் திருமேனியில் மீண்டும் சந்தனம் பூசப்பட்டு, மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மரகத நடராஜரை நாள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா். பின்னா், திங்கள்கிழமை இரவு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மரகத நடராஜா் சந்நிதி நடை சாத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தலைமையில், 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
இதுகுறித்து பக்தா்கள் கூறியதாவது: கோயில் நிா்வாகம் கட்டணமில்லா தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை. சுவாமி தரிசனத்துக்கு ரூ. 10, ரூ. 100, ரூ. 250 என டிக்கெட் விற்பனை செய்வதில் மட்டுமே கோயில் நிா்வாகம் கவனம் செலுத்தியது. சந்தனம் பாக்கெட் விற்பனை கடந்த ஆண்டு ரூ. 100-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 250-க்கு விற்கப்பட்டது என்றனா்.