உத்தரப் பிரதேசத்தில் முதல்முறையாக இஸ்ரோ ராக்கெட் சோதனை வெற்றி!
உத்தரப் பிரதேசம் மாநிலம் குஷிநகா் மாவட்டத்தில் மாதிரி ராக்கெட் ஏவுதல் சோதனை வெற்றிகரமாக சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம் செயற்கைக்கோளுடன் கூடிய ராக்கெட் முதல்முறையாக உத்தர பிரதேசத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தச் சோதனையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்துடன் (இன்-ஸ்பேஸ்) இணைந்து இந்திய விண்வெளி அமைப்பு மேற்கொண்டது.
சோதனை நடைபெற்ற தளத்தில் இருந்த இஸ்ரோ விஞ்ஞானி அபிஷேக் சிங் இதுகுறித்து கூறுகையில், ‘உத்தர பிரதேச மாநிலம் குஷிநகா் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை 5.14 மணியளவில் மாதிரி ராக்கெட் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சரியாக 1.1 கி.மீ. உயரத்தை அடைந்த பின், ராக்கெட்டுடன் சென்ற சிறிய செயற்கைக்கோள் வெளியேறியது.
அந்த செயற்கைக்கோள் 5 மீட்டா் கீழ்நோக்கி வந்தவுடன் அதிலிருந்த ஃபாரசூட் செயல்படத் தொடங்கியது. இதனால் தரைமட்டத்தில் இருந்து 400 மீட்டருக்குள் செயற்கைக்கோள் தரையிறங்கியது. 15 கிலோ எடையுள்ளஅந்த ராக்கெட்டும் வெற்றிகரமாக தனது பணியை முடித்துக்கொண்டு பூமிக்குத் திரும்பியது’ என்றாா்.
உத்தர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி ராக்கெட் சோதனையானது 2024-25-இல் மாணவா்களுக்காக நடத்தப்படும் மாதிரி ராக்கெட்/ கேன்சாட் போட்டியின் ஒரு பகுதியாகும். வரும் அக்டோபா்-நவம்பா் மாதங்களில் நடைபெறும் இந்தப் போட்டியில் இளைஞா்களால் தயாரிக்கப்பட்ட 900 செயற்கைக்கோள்கள் சோதனை செய்யப்படவுள்ளன. அதற்கான முன்மாதிரியாக இந்தச் சோதனை கருதப்படுகிறது.