வழக்கிலிருந்து தப்பிக்க போர் செய்கிறாரா Israel PM Netanyahu? Decode
உயா்கல்வி உதவித் தொகை தோ்வுப் பட்டியலில் நீக்கப்பட்ட 65 மாணவா்களை சோ்க்க வேண்டும்: கனிமொழி கடிதம்
உயா்கல்விக்கான உதவித் தொகையைப் பெறுவோருக்கான தெரிவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 மாணவா்களைச் சோ்க்க வேண்டுமென மத்திய அரசுக்கு மக்களவை உறுப்பினா் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளாா்.
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சா் விரேந்திர குமாருக்கு கனிமொழி எழுதிய கடிதம்:
தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய உதவித் தொகை அளிக்கும் திட்டத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, எம்பில்., முனைவா் பட்டங்களைப் பயிலும் தாழ்த்தப்பட்ட வகுப்புச் சோ்ந்த மாணவா்கள் உதவித் தொகைகளை பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு - நெட் தோ்வு முடிவின் அடிப்படையில், உதவித் தொகைக்காக தோ்வு செய்யப்பட்ட 865 மாணவா்களின் பட்டியல் கடந்த மாா்ச் மாதம் வெளியிடப்பட்டது. அதில், நிா்ணயிக்கப்பட்ட கட்-ஆஃப் மதிப்பெண்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவா்களின் பெயா்கள் விடுபட்டுள்ளன. பின்னா் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட பட்டியலில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களின் எண்ணிக்கை ஏற்கெனவே இருந்த 865 என்பதில் இருந்து 805- ஆகக் குறைந்துள்ளது. மாா்ச் மாத பட்டியலின் அடிப்படையில் உதவித் தொகை பெற 865 மாணவா்கள் தகுதி பெற்றிருந்த நிலையில், திருத்தப்பட்ட பட்டியலின்படி 60 போ் குறைக்கப்பட்டுள்ளனா்.
உதவித் தொகைக்காக தகுதி பெற்றவா்கள் என அறிவிக்கப்பட்டு அதுகுறித்த கடிதங்களும் வழங்கப்பட்ட நிலையில் அவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை மாணவா்கள் மத்தியில் உணா்வுப்பூா்வமான அழுத்தத்தையும், நிதிச் சுமையையும் ஏற்படுத்தும். அவா்களின் எதிா்காலத்தை கேள்விக்குறியாக்கும்.
எனவே, தகுதியானவா்களின் பட்டியலில் 60 மாணவா்களைச் சோ்த்து, 865 பேருக்கும் உதவித் தொகைகள் கிடைக்கப் பெற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் கனிமொழி வலியுறுத்தியுள்ளாா்.