நடுவழியில் துர்நாற்றம், தொழில்நுட்பக் கோளாறு! சீன விமானம் அவசர தரையிறக்கம்!
Kapil Dev : 'கபில் தேவ் பெயரை மட்டும் தவிர்ப்பது ஏன்?' -ஆர்வம் காட்டாத பிசிசிஐ!
'ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை!'
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது இந்திய அணி. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. ஒரு போட்டி நடந்து முடிந்திருக்கிறது. வழக்கமாக இங்கிலாந்தும் இந்தியாவும் இங்கிலாந்தில் வைத்து ஆடும் தொடரை பட்டோடி கோப்பை என்றழைப்பார்கள்.

முன்னாள் இந்திய வீரர் டைகர் பட்டோடியின் நினைவைப் போற்றும் வகையில் அவரின் பெயரை வைத்திருந்தார்கள். இப்போது அதைமாற்றி 'ஆண்டர்சன் டெண்டுல்கர் கோப்பை' என வைத்திருக்கிறார்கள். ஜேம்ஸ் ஆண்டர்சனையும் சச்சின் டெண்டுல்கரையும் பெருமைப்படுத்தும் வகையில் இதை செய்திருக்கிறார்கள். இருவருமே அந்தந்த நாடுகளின் கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்கவே முடியாத வீரர்கள். அந்த வகையில் அவர்களின் பெயரை வைப்பதில் எந்தத் தவறும் இல்லை.
பட்டோடியின் பெயரை எடுத்துவிட்டு என் பெயரை வைக்க வேண்டாம் என சச்சின் கோரிக்கை வைத்திருந்தார். இது சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியிருந்தது. இங்கேதான் இன்னொரு இயல்பான கேள்வி மேலெழுவதை தவிர்க்க முடியவில்லை. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்கவே முடியாத வீரர் கபில்தேவ். ஆனால், அவரின் பெயரில் இங்கே எந்தத் தொடருமே இல்லையே?

'1983 உலகக்கோப்பை வெற்றி!'
இந்திய கிரிக்கெட் இன்றைக்கு உச்சத்தில் இருக்கிறது. பொருளாதாரரீதியாகவும் கட்டமைப்புரீதியாகவும் உலகிலேயே வலுவான போர்டை கொண்டிருக்கும் நாடு இந்தியாதான். வேறெந்த நாட்டு வீரர்களை விடவும் இந்திய வீரர்கள் அதிகமாகவே பொருளீட்டுகின்றனர். இந்த நிலைமைக்கெல்லாம் விதை போட்டது கபில் தேவ்.
1983 இல் கத்துக்குட்டியாக இருந்த இந்திய அணியை உலகக்கோப்பையை வெல்ல வைத்தது கபில் தேவின் தீரமே. இங்கிலாந்தில் இந்திய அணி அந்த உலகக்கோப்பையை வென்ற பிறகுதான் இந்தியாவில் கிரிக்கெட் இன்னும் பிரபலமாகிறது. கிரிக்கெட்டை சுற்றி பெரும் வணிகமே உருவாகத் தொடங்குகிறது. மேலும், கபில் தேவின் எழுச்சி சமூகரீதியாகவும் கிரிக்கெட் எல்லாருக்குமானது என்கிற எண்ணத்தை விதைத்தது.

ஒரு உலகக்கோப்பையை வெல்வது அத்தனை எளிதான காரியமில்லை. அதுவும் பெரிய ஆதரவும் இல்லாத நம்பிக்கை இல்லாத, பொருளாதார வசதியில்லாத அந்த காலக்கட்டத்தில் உலகக்கோப்பையை வெல்வது லேசுபட்ட விஷயமே இல்லை. கபில்தேவுக்கு பிறகு அடுத்த உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணி 28 ஆண்டுகளை எடுத்துக் கொண்டது. கிரிக்கெட் உலகில் கபில் தேவ் இந்தியாவுக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தார். அந்த உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகுதான் மற்ற அணிகள் இந்தியாவை ஒரு பொருட்டாகவே மதிக்கத் தொடங்கின.

'கபில்தேவின் சகாப்தம்!'
கபில் தேவுக்கு இருந்த கனவும் உலகக்கோப்பைக்காக அவர் எடுத்த பிரயத்தனங்களும்தான் இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தன. ஜிம்பாப்வேக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டமும் இறுதிப்போட்டியில் அவர் பிடித்த அந்த கேட்ச்சும், சட்டையில் அழுக்குப்படாமல் கிரிக்கெட் ஆடிய அந்த காலக்கட்டத்தில் யாரும் செய்திடாதது. அப்படிப்பட்டவரின் பெயர் வரலாற்றில் நிற்கும்படி எந்தத் தொடருக்கும் அவரின் பெயர் வைக்கப்படவில்லையே?
இங்கிலாந்து - இந்தியா தொடரை பட்டோடி கோப்பை, ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை, ஆஸ்திரேலியா - இந்தியா தொடரை பார்டர் - கவாஸ்கர் கோப்பை என்றழைக்கிறார்கள். இந்தியாவில் நடக்கும் உள்ளூர் தொடர்களை விஜய் ஹசாரே, சையத் முஷ்தாக் அலி, ரஞ்சி, துலீப் டிராபி, இராணி, விஜய் மெர்ச்சண்ட் கோப்பை என முன்னாள் வீரர்களின் பெயர்களாலும் நிர்வாகிகளின் பெயர்களாலும் நினைவுக்கூறுகின்றனர்.

அப்படியிருக்க கபில் தேவின் பெயரை எந்தத் தொடருக்கும் வைத்து பெருமைப்படுத்தாதது ஏன்? பிசிசிஐ அதற்கான முன்னெடுப்புகள் எதையும் எடுக்கவில்லையே? பிசிசிஐக்கும் கபில் தேவுக்கும் இடையில் சில முரண்பாடுகள் இருந்ததை அனைவருமே அறிவர். 2007 இல் பிசிசிஐயின் தடையை மீறி ஐ.பி.எல் யை போன்ற ஐ.சி.எல் என்ற தொடரை கபில் தேவ் முன் நின்று நடத்தினார்.
'புறக்கணிக்கப்படுகிறாரா கபில்தேவ்!'
கபில் தேவ் நடத்திய அந்தத் தொடரில் ஆடிய வீரர்கள் மீது பிசிசிஐ தடை விதித்தது. கபில் தேவுடைய ஓய்வூதிய பலன்களையுமே நிறுத்தி வைத்தது. 2012 இல் தான் இந்தத் தடைகளையெல்லாம் நீக்கியது. கபில் தேவுக்கும் பிசிசிஐக்கும் இடையில் நடந்த கசப்பான சம்பவம் அது. ஆனால், அதற்காக கபில் தேவின் பெயரையும் அவர் ஆற்றிய கிரிக்கெட்டுக்காக ஆற்றிய பணிகளையும் போற்ற மறுப்பது எந்த வகையில் நியாயம்?

ஒரு தொடருக்கு ஒரு முன்னாள் வீரரின் பெயரை வைப்பதை வெறுமென அவரை கௌரப்படுத்தும் செயலாக மட்டுமே பார்க்க முடியாது. வரலாற்றில் அவரது பெயர் என்றும் நிலைத்து நிற்கும்படி செய்வதற்கான முயற்சியே அது. கபில்தேவின் பெயர் அதற்கு தகுதியானது. கபில் தேவை கௌரவபடுத்தாமல் விடுவது பிசிசிஐக்குதான் அவமானம்.!