தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தப்படும் கங்கை நதி! காங்கிரஸ் குற்றச்சாட்டு
``ஊதியம் வழங்க முடியவில்லை என்றால்.. அரசின் பங்கு என்ன?'' - மதுரை காமராசர் பல்கலை., ஊழியர்கள்
பல்வேறு புகார்கள், சர்ச்சைகளால் கல்வி தரத்தையும், மதிப்பையும் இழந்துவரும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சமீபகாலமாக ஓய்வுவூதியர்களுக்கும் தற்போது பணிபுரிபவர்களுக்கும் ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பதாக புகார் எழுந்து வருகிறது.

இதுகுறித்து மதுரை காமரசர் பல்கலைக் கழகப் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் பேரா அ.சீனிவாசன், பொதுச் செயலாளர் பேரா.இரா.முரளி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நிதி நெருக்கடி ஏற்பட்டு, அதன் விளைவாக 130 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஒரே நாளில் பணிநீக்கம் செய்யப்பட்டது நிகழ்ந்தது. அப்போதே கல்வியாளர்கள், கல்வி சார் இயக்கங்கள், பல்கலைக்கழகத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டுமென்று அரசிடம் கோரிக்கை வைத்தன.
ஆனால், அந்த பிரச்சனை நீண்டு தற்போது ஓய்வு பெற்றவர்களுக்கும் தற்போது பணிபுரிபவர்களுக்கும் ஊதியம் வழங்குவதையே நிறுத்தி வைக்கும் அளவிற்கு சென்றுவிட்டது.
ஏற்கெனவே 3 மாதத்துக்கான ஓய்வூதியம் மிகவும் தாமதமாகத வழங்கப்பட்டது. தற்போது மே மாத ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை.
தற்போது மொத்தம் 438 பேர். ஓய்வூதியத்தை நம்பியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் கடைநிலை ஓய்வூதியர்களின் நிலை மிகவும் மோசம். பணியில் உள்ள பேராசிரியர்கள், ஊழியர்கள் என பல நூறு பேர் ஊதியம் கிடைக்காமல் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்.
அரசுக்குப் பலமுறை வேண்டுகோள் விடப்பட்டும் இப்பிரச்னையை தீர்ப்பதில் அக்கறை காட்டவில்லை. தணிக்கை துறைத் தடைகளை (Audit Objections) காரணமாகக் காட்டி ஊதியத்திற்கான நிதியை வழங்க அரசு மறுத்து வருகின்றது. தணிக்கைப் பிரச்னைகளை சரி செய்திருக்க வேண்டிய பொறுப்பு நிதி அலுவலர் (Finance Officer) மற்றும் தணிக்கைத்துறை அதிகாரி (Deputy Director)யைச் சார்ந்தது.

பல்கலைக்கழகத்தை நெறிப்படுத்திச் செல்ல அரசுச் செயலர்கள் ஆட்சிக்குழுவில் இருந்திருக்கிறார்கள், இருக்கின்றர்கள். பல்கலைக்கழகத்தின் நிதி மேலாண்மைக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிச் சரி செய்ய வேண்டியது அரசின் கடமை. தவறு செய்தவர்களைத் தண்டிப்பதை விட்டு விட்டு ஓய்வூதியர்களையும், பணி புரிபவர்களையும் பலிகடாவாக்குவது அறமல்ல. அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் பல முறை முறையீடு செய்தும் பாராமுகமாக அரசு இருப்பதை மதுரை காமராசர் பல்கலைக் கழக பாதுகாப்புக்குழு கண்டிக்கின்றது.
ஆண்டுக்கு சுமார் 100 கோடி ரூபாயைக் கூட அரசு பல்கலைக்கழங்களுக்கு ஊதியத்திற்காக வழங்கமுடியவில்லை என்றால் அது மிகவும் அவலமானது. பல்கலைக் கழகங்களே தங்கள் நிதி ஆதாரத்தை உண்டாக்க வேண்டும் என்றால் அதில் அரசின் பங்கு என்ன?
பல்கலைக் கழகங்கள் நிதியை உருவாக்கவேண்டுமெனில் அவைகளும் சுயநிதி நிறுவனங்களை போல மாணவர்களிடம் வசூல் வேட்டையை நடத்த வேண்டி வரும். உயர்கல்வியில் தமிழகம் முன்னிற்கிறது என்று கூறிவரும் அரசு, உடனடியாக மதுரை காமராசர் பல்கலைக்கழக ஓய்வூதியம் மற்றும் ஊதியப் பிரச்னையை தீர்க்க நிதி வழங்க வேண்டுகிறோம்.
நிலைமை இப்படியே நீடித்தால் அடிப்படை வசதிகளுக்கான செலவுகள் கூட செய்ய இயலாத நிலை பல்கலைக்கழகத்திற்கு உண்டாகும். தனியார் நிதி உதவியை நாடும் ஆபத்தும் உண்டாகி வருகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஊதியத்திற்காக குறைந்தபட்சம் 100 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்க வேண்டுகிறோம். அதை நிர்வாகப் பிரச்னைகளை காரணம் காட்டி நிறுத்தக் கூடாது.
கருவூலங்கள் மூலம் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு வழிவகை செய்ய கோருகிறோம். பல்கலைக் கழக வளங்களை, சொத்துகளை தனியார் பயன்பாட்டிற்கு வாடகைக்கு விடும் யோசனைகளையும் கைவிடக் கோருகிறோம். அரசு உடனடியாக இதில் தீர்வு காணவில்லையெனில் பல்கலைக் கழகத்தைப் பாதுகாக்க மக்கள் இயக்கங்கள் இணைந்து கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை உருவாகும்." என்று தெரிவித்துள்ளனர்.