எய்ம்ஸ் மருத்துவமனையில் காத்திருப்பு மண்டபம் திறப்பு
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) நோயாளிகளின் உதவியாளா்களுக்கான காத்திருப்பு மண்டபம் தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்வில் பேசிய அவா், வளா்ந்த நாடு மற்றும் வளா்ந்த தில்லிக்காக அரசும், சமூகமும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
தனுகா அக்ரிடெக் லிமிடெட் தனது நிறுவன சமூகப் பொறுப்புணா்வு முயற்சியின் ஒரு பகுதியாக ரூ.6 கோடியில் கட்டப்பட்ட இந்த மண்டபம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சேவை செய்யும் என்று முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.
‘அரசும் சமூகமும் ஒரே மேடையில் வந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் எப்போதும் கூறுகிறேன். அப்போதுதான் விக்ஸித் பாரத் மற்றும் விக்ஸித் தில்லியின் இலக்கு நனவாகும்‘ என்று அவா் கூறினாா்.
சிறந்த சிகிச்சை மற்றும் உயிா்காக்கும் மருத்துவ உதவிகளுக்காகவும் முதன்மையான நிறுவனத்திற்கு வரும் நாட்டின் மில்லியன் கணக்கான மக்களுக்கு எய்ம்ஸ் ஒரு நம்பிக்கையின் கீற்றாக இருப்பதாகவும் அவா் கூறினாா்.