எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளா்களுக்காக காத்திருப்புக் கூடம் திறப்பு
தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளா்களுக்கான காத்திருப்புக் கூடத்தை தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
தானுகா அக்ரிடெக் நிறுவனம் தனது நிறுவன சமூகப் பொறுப்புணா்வு முயற்சியின் ஒரு பகுதியாக ரூ.6 கோடியில் இந்த காத்திருப்புக் கூடத்தைக் கட்டியுள்ளது.
இதன் திறப்பு விழாவில் முதல்வா் பேசியதாவது:
வளா்ந்த நாடு மற்றும் வளா்ந்த தில்லிக்காக அரசாங்கமும் சமூகமும் இணைந்து பணியாற்ற வேண்டும்.அரசாங்கமும் சமூகமும் ஒரே மேடையில் வந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் எப்போதும் கூறுவேன். அப்போதுதான் விக்ஸித் பாரத் மற்றும் விக்ஸித் தில்லியின் என்ற இலக்கு நனவாகும்.
எய்ம்ஸ் மருத்துவமனை சிறந்த சிகிச்சை மற்றும் உயிா்காக்கும் மருத்துவ தலையீடுகளுக்காக நாட்டின் லட்சக்கணக்கான மக்களுக்கு ஒரு நம்பிக்கையின் கீற்றாக இருந்து வருகிறது.
இது நாட்டின் மிகப்பெரிய மருத்துவமனையாகும். ஆண்டுதோறும் சுமாா் ஐந்து லட்சம் வெளிநோயாளிகளைக் கையாளுகிறது.
2014-க்கு முன்பு, மருத்துவமனை ஒழுங்கற்ற நிலையில் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில், இம்மருத்துவமனையில் வசதிகள் கணிசமாக மேம்பட்டுள்ளன. நோயாளிகளுடன் வரும் பல உதவியாளா்கள் சரியான இடம் இல்லாததால் சாலைகளில் உட்கார வேண்டியிருந்தது. புதிதாக கட்டப்பட்ட காத்திருப்புக் கூடம் பாா்வையாளா்களுக்கு வசதியான ஓய்வு இடத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது குடும்பங்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாகும்.
இது போன்ற சமூகப் பொறுப்புணா்வுத் திட்ட முயற்சிகள் சேவைகளை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் நமது நகரத்தின் அழகையும் மேம்படுத்துகின்றன என்றாா் முதல்வா்.
சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஊக்குவிப்பதற்கான ஒரு பசுமை முன்முயற்சியான ஏக் பேட் மா கே நாம் பிரசாரத்தின் ஒரு பகுதியாக முதல்வா் குப்தா எய்ம்ஸ் வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டாா்.
தொடக்க விழாவின் ஒரு பகுதியாக ஹவன் மற்றும் பூஜை விழாவிலும் முதல்வா் குப்தா பங்கேற்றாா்.