ஐபிஎல் தொடரா? இந்திய அணியா? வீரர்களின் இலக்கு குறித்து பேசிய ரிஷப் பந்த்!
கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டுமா? அல்லது இந்திய அணியில் இடம்பெறுவதில் கவனம் செலுத்த வேண்டுமா? என்பது குறித்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் பேசியுள்ளார்.
நியூசிலாந்தை வீழ்த்தி அண்மையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி மூன்றாவது முறையாக வென்றது. சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தபோதிலும், அணியின் பிளேயிங் லெவனில் விளையாடுவதற்கான வாய்ப்பு ரிஷப் பந்த்துக்கு கிடைக்கவில்லை.
இதையும் படிக்க: பாகிஸ்தான் டி20 தொடருக்கான நியூசி. அணி அறிவிப்பு; முக்கிய வீரர்கள் இல்லை!
ஐபிஎல் தொடரா? இந்திய அணியா?
இந்திய அணி அண்மையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற நிலையில், கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டுமா? அல்லது இந்திய அணியில் இடம்பெறுவதில் கவனம் செலுத்த வேண்டுமா? என்பது குறித்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஜியோ ஹாட்ஸ்டாரில் ரிஷப் பந்த் பேசியதாவது: சிறுவயதிலிருந்தே எனக்கு இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு மட்டுமே இருந்தது. ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என ஒருபோதும் நான் நினைத்ததில்லை. ஆனால், இன்று வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பதற்கே அதிக கவனம் கொடுப்பதாக நினைக்கிறேன்.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி 2025: சிறந்த அணியை அறிவித்த ஐசிசி; 6 இந்திய வீரர்களுக்கு இடம்!
ஐபிஎல் தொடர் வீரர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், வீரர் ஒருவர் தனது நாட்டுக்காக விளையாடுவதை தனது இலக்காக எடுத்துக்கொள்ள வேண்டும். நாட்டுக்கு விளையாடுவதற்கு முன்னுரிமையும், ஐபிஎல் உள்பட மற்ற தொடர்களில் விளையாடுவதை இரண்டாவது தெரிவாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற மிகப் பெரிய இலக்கை வைத்துக் கொண்டால், வெற்றி உங்களை பின் தொடரும். இந்திய அணிக்காக விளையாடுவேன் என்பதை நான் எப்போதும் நம்பினேன். கடவுள் அருளால் எனது நம்பிக்கை வீண்போகவில்லை. என்னுடைய 18 வயதில் இந்திய அணிக்காக விளையாடக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்புக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன் என்றார்.