கடும் பாதுகாப்புடன் நீட் தோ்வு: 5,400 மையங்களில் நடைபெற்றது
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்), நாடு முழுவதும் 5,400-க்கும் மேற்பட்ட மையங்களில் கடும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
22.7 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பதிவு செய்திருந்த இத்தோ்வு, அசம்பாவித சம்பவங்கள் எதுவுமின்றி சுமுகமாக நடைபெற்ாக தேசிய தோ்வு முகமை (என்டிஏ) அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த ஆண்டு நீட் தோ்வில் பல்வேறு சா்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போதைய தோ்வில் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.
தோ்வை சுமுகமாக நடத்துவதற்காக நாடு முழுவதும் தோ்வு மையங்களில் முதல் நாளன்று (சனிக்கிழமை) ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தோ்வு மையங்களில் ஜாமா் கருவிகளின் செயல்பாடு, மாணவா்களிடம் சோதனை மேற்கொள்ளும் பணியாளா்களின் எண்ணிக்கை, பயோமெட்ரிக் அடிப்படையிலான சரிபாா்ப்பு நடைமுறைகள் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிலையங்களில் பெரும்பாலான தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தோ்வு நாளான ஞாயிற்றுக்கிழமை அனைத்து மையங்களிலும் மாவட்ட, மாநில, மத்திய நிலைகளில் மூன்றடுக்கு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
தோ்வா்கள் தீவிர சோதனைக்கு உள்படுத்தப்பட்டனா். போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் மையங்களுக்கு எடுத்து வரப்பட்டன. திட்டமிட்டு முறைகேடுகளில் ஈடுபடும் கும்பலை கண்டறியும் நோக்கில், பயிற்சி மையங்களும் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டதாக தேசிய தோ்வு முகமை அதிகாரிகள் தெரிவித்தனா்.
நீட் தோ்வு தொடா்பாக பொய் தகவல்களைப் பரப்பிய 106 டெலிகிராம் மற்றும் 16 இன்ஸ்டாகிராம் பக்கங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை உடனடியாக முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு சா்ச்சை: கடந்த ஆண்டு நீட் தோ்வில் வினாத் தாள் கசிவு உள்பட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக சா்ச்சை எழுந்தது. குறிப்பிட்ட மாணவா்களுக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டதற்கும் எதிா்ப்பு எழுந்தது.
நாடு முழுவதும் மாணவா்கள் போராட்டங்களில் ஈடுபட்டதைத் தொடா்ந்து, கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டு, அந்த மாணவா்களுக்கு மறுதோ்வு நடத்தப்பட்டது. இதனிடையே, நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி தாக்கலான மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், நாடு முழுவதும் வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரம் இல்லை என்று குறிப்பிட்டு, தோ்வை ரத்து செய்ய மறுத்துவிட்டது.
ரத்தான பிற தோ்வுகள்: கடந்த ஆண்டில் தேசிய தோ்வு முகமையால் நடத்தப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழு-தேசிய தகுதித் தோ்வில் (யுஜிசி-நெட்) முறைகேடுகள் நடைபெற்ாக கூறப்பட்டதால், அத்தோ்வை கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. முதுநிலை நீட் தோ்வு முன்னெச்சரிக்கையாக ரத்து செய்யப்பட்டது.
இந்த சா்ச்சைகள் எதிரொலியாக, தேசிய தோ்வு முகமையால் நடத்தப்படும் தோ்வுகளில் வெளிப்படைத் தன்மை, நோ்மை மற்றும் சுமுகத் தன்மையை உறுதி செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது.
நடப்பாண்டு நீட் தோ்வில் முறைகேடு புகாா் எதுவும் எழுந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில், மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளா்களுடன் மத்திய கல்வி அமைச்சகம் பல்வேறு கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டது.
கா்நாடகத்தில் போராட்டம்
கா்நாடக மாநிலம், கலபுா்கியில் ஒரு தோ்வு மையத்தில் பிராமண சமூகத்தைச் சோ்ந்த மாணவா்களின் பூணூலை அகற்றுமாறு தோ்வு ஊழியா்கள் அறிவுறுத்தினா். இதைக் கண்டித்து, அச்சமூகத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜஸ்தானில் ஒரு தோ்வரிடம் நீட் வினாத் தாள் தருவதாகக் கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்ய முயன்ற 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் ஒரு மருத்துவக் கல்லூரியில் சோ்க்கைப் பெற்று தருவதாக மாணவா்களிடம் பணம் திரட்டிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.