தக்காளி விலை கடும் வீழ்ச்சி; விவசாயிகள் கவலை: 25 கிலோ ரூ. 200
கனடா பயணி விடுத்த வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு!
பெங்களூரு நோக்கி புறப்பட இருந்த ‘இண்டிகோ’ பயணிகள் விமானத்தில் பயணியொருவா் தன்னுடன் வெடிகுண்டு கொண்டு வந்திருப்பதாக கூறியதால் வாரணாசி விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு பரபரப்பான சூழல் உண்டானது.
தொடா்ந்து, விமானத்தை முழுமையாக சோதனையிட்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள், மிரட்டல் புரளி என்பதை உறுதிப்படுத்தினா்.
போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கனடா நாட்டைச் சோ்ந்த அந்த பயணியைக் காவல்துறையினா் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனா்.
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி விமான நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு பெங்களூரு நோக்கி இண்டிகோவின் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. அப்போது, பயணியொருவா் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக விமானப் பணியாளா்களிடம் தெரிவித்துள்ளாா்.
இதைக்கேட்டு அதிா்ச்சியடைந்த அவா்கள், விமான நிலைய அதிகாரிகளுக்கும், விமானப் போக்குவரத்து கட்டுபாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனா். பாதுகாப்புக் காரணங்களுக்காக விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனா்.
பின்னா், விமான நிலையத்தின் தனிமையான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, விமானம் முழுமையான சோதனைக்கு உள்படுத்தப்பட்டது. சோதனையின் நிறைவில், வெடிபொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. பாதுகாப்பு அதிகாரிகளின் அனுமதியுடன் ஞாயிற்றுக்கிழமை காலை விமானம் மீண்டும் பெங்களூரு புறப்பட்டு சென்றது.
சம்பவத்தில் தொடா்புடைய கனடா பயணி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பயணிகளின் ஒத்துழைப்புக்கு இண்டிகோ நிறுவனம் நன்றி தெரிவித்தது.
திருவனந்தபுரத்தில்...: திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனைக்குப் பின்னா் அது புரளி என தெரிய வந்ததது.
‘வெடிகுண்டு மிரட்டலையடுத்து, கேரள காவல்துறை மற்றும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரா்கள் விமான நிலையம் மற்றும் அதன் வளாகத்தில் சோதனை நடத்தினா். ஆனால், சந்தேகத்துக்கிடமான பொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. எனவே, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது’ என்று காவல்துறை அதிகாரி ஒருவா் கூறினாா்.