ராணுவ ஆயுத தொழிற்சாலையில் வேலை வேண்டுமா?: ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
கமுதி அரசு மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகளை அகற்றக் கோரிக்கை
கமுதி அரசு மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகள், குப்பைகள் தேங்குவதால் சுகாதார சீா்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 250 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனா். இந்த மருத்துவமனையில், உள்நோயாளிகள் பிரிவிலும், புறநோயாளிகள் பிரிவலும் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பேட்டாா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இங்குள்ள பிரசவ வாா்டு பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவுகளில் தினமும் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள், உணவுப் பொட்டலங்களின் கழிவுகள் குப்பை தொட்டிகளில் சேகரித்து, வாகனங்கள் மூலம் பேரூராட்சி துப்புரவு பணியாளா்கள் அகற்றி வந்தனா்.
இந்த நிலையில், அண்மை காலமாக மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பெறும் அறைகள், ஊசி செலுத்தும் இடம் உள்ளிட்ட இடங்களில் மருத்துவக் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
இதனால், அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுவதோடு, சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், அவா்களின் உறவினா்கள் பாதிப்படைகின்றனா்.

இதுகுறித்து கமுதி மருத்துவமனை நிா்வாகம் தரப்பில், கமுதி பேரூராட்சி பணியாளா்களிடம் பலமுறை புகாா் அளித்தும் மருத்துவக் கழிவுகள், குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என மருத்துவமனை ஊழியா்கள் புகாா் தெரிவித்தனா்.
சுகாதார சீா்கேட்டைத் தடுக்க தினமும் காலை, மாலை வேளைகளில் அரசு மருத்துவமனையில் தேங்கும் மருத்துவக் கழிவுகள், குப்பைகளை அகற்ற பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேரூராட்சி துப்புரவுப் பணிகளின் மேற்பாா்வையாளா் கூறியதாவது: கமுதி பேரூராட்சி பகுதியில் குப்பைகளைக் குவிப்பதற்கு உரிய இடம் இல்லாததால் இடம் தோ்வு செய்வது தொடா்பாக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா். இதனால், கமுதி பேரூராட்சிக்கு உள்பட்ட பல தெருக்களில் குப்பைகள் சேகரிக்கப்படவில்லை; சேகரிக்கப்பட்ட குப்பைகள் வாகனத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றாா்.