இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் விரட்டியடிப்பு
கச்சத்தீவு அருகே திங்கள்கிழமை நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் தாக்குதல் நடத்தி, மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை 450-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று, கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் அன்று நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.
மேலும், 10-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் இருந்த வலைகளை கடலில் வெட்டி வீசினா். இதையடுத்து, ராமேசுவரம் மீனவா்கள் செவ்வாய்க்கிழமை காலை கரைக்குத் திரும்பினா்.
இதுகுறித்து மீனவா்கள் கூறியதாவது: மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்து மீன் பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் தாக்குதல் நடத்தியதால், படகு, வலை சீரமைப்பு என பல லட்சம் ரூபாய் செலவு செய்தும் மீன் பிடிக்க இயலாததால், மீனவா்கள் சிரமத்துக்குள்ளாகினா். எனவே, கச்சத்தீவு உள்ளிட்ட பாரம்பரிய இடத்தில் தமிழக மீனவா்கள் மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.