What to watch on Theatre: நாங்கள், டென் ஹவர்ஸ், Sinners - இந்த வாரம் என்ன பார்க்...
கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: மே 2 அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதம்
ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மே 2ஆம் தேதி நடக்கும் அமைச்சரவைக்கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் தெரிவித்தாா்.
கா்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் பரிந்துரைகள் அடங்கிய சமூக, பொருளாதார, கல்வி கணக்கெடுப்பு அல்லது ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை-2015, ஏப்.11ஆம் தேதி அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து பொதுவெளியில் வெளியான தகவல்களை தொடா்ந்து, பெரும்பான்மை சமூகங்கள் என்று கருதப்படும் லிங்காயத்து, ஒக்கலிகா் போன்ற முன்னேறிய சமுதாயங்களின் சங்கங்கள், அமைப்புகள், மடாதிபதிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
பாஜக, மஜத போன்ற அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிா்த்துள்ளன. இதனிடையே, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக பிற்படுத்தப்பட்டோா் சமுதாய அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன. இந்நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்துவிவாதிப்பதற்காக பெங்களூரு, விதானசௌதாவில் வியாழக்கிழமை முதல்வா் சித்தராமையா தலைமையில் சிறப்பு அமைச்சரவைக்கூட்டம் பெரும் பரபரப்புக்கு இடையே நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சட்டத்துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் கூறியது: கா்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையம் வழங்கியிருக்கக்கூடிய சமூக, பொருளாதார, கல்வி கணக்கெடுப்பு அறிக்கை-2015இல் குறிப்பிட்டுள்ள புள்ளிவிவரங்கள் குறித்து அமைச்சரவைக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இன்னும் சில கூடுதல் தகவல்கள் தேவைப்படுகிறது. அதை வழங்குமாறு சம்பந்தப்பட்ட மூத்த அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், சுமுகமானமுறையில் விவாதம் நடைபெற்றது. மக்கள் தொகை, பின் தங்கிய நிலை உள்ளிட்டவை குறித்து அலசப்பட்டது. சமூக, கல்வி, பொருளாதார கூறுகளை முடிவு செய்ய எடுத்துக்கொண்ட அளவுருக்கள் குறித்து விவாதம் நடந்தது. இந்த கூட்டத்தில் விவாதம் முழுமையடையவில்லை. எனவே, இது குறித்த விவாதம் அடுத்த அமைச்சரவைக்கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படும். அடுத்த அமைச்சரவைக்கூட்டம் மலேமாதேஸ்வரா மலையில் ஏப்.24ஆம் தேதி நடக்கவிருக்கிறது. அங்கு உள்ளூா் வளா்ச்சிப்பணிகள் குறித்து விஷயங்கள் விவாதிக்கப்படுவதால், மே 2ஆம் தேதி நடக்கவிருக்கும் அமைச்சரவைக்கூட்டத்தில் சமூக, பொருளாதார, கல்வி கணக்கெடுப்பு அறிக்கை மீதான விவாதம் மீண்டும் நடக்கும். அந்த கூட்டத்தில் அறிக்கை மீது இறுதி முடிவெடுக்கப்படும். என்றாா் அவா்.