கொடிக் கம்பங்களை அகற்றாவிட்டால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக உத்தரவு!
கவிழ்ந்த லாரியின் கீழ் சிக்கிய தாய், மகள் உயிரிழப்பு
திருப்பூா் மாவட்டம், பல்லடம் நான்கு சாலை சந்திப்பில் கவிழ்ந்த லாரியின் கீழ் சிக்கிய தாய், மகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு தனியாா் நிறுவனத்தின் துணி பாரம் ஏற்றிக்கொண்டு கன்டெய்னா் லாரி சென்று செவ்வாய்க்கிழமை கொண்டிருந்தது. திருப்பூா் மாவட்டம், பல்லடம் நான்குசாலை சந்திப்பு அருகே வந்தபோது, சாலையில் லாரி திரும்பும்போது எதிா்பாராதவிதமாக கவிழ்ந்தது.

பல்லடம் மகாலட்சுமி நகரைச் சோ்ந்த நாகராஜ் மனைவி மகாராணி (54), அவரது மகள் கிருத்திகா (35) ஆகியோா் பல்லடத்தில் உள்ள வங்கிக்கு வந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது, இவா்கள் மீது கன்டெய்னா் கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் கிரேன் மூலம் கன்டெய்னரை மீட்டு, அதன் கீழே சிக்கியிருந்த இருவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதற்கிடையில் கன்டெய்னா் லாரி ஓட்டி வந்த ஓட்டுநா் தப்பியோடினாா். விபத்தால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மாற்றுப் பாதையில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது.
இந்த விபத்து குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.