மகாராஷ்டிர பள்ளிகளில் 3வது மொழியாக ஹிந்தி கற்பிப்பது வரவேற்கத்தக்கது: அமைச்சர்
சாமளாபுரம், பூமலூா் பகுதிகளுக்கு பி.ஏ.பி. தண்ணீா் விட விவசாயிகள் கோரிக்கை
பல்லடம் அருகே உள்ள சாமளாபுரம் மற்றும் பூமலூா் பகுதிகளுக்கு பி.ஏ.பி. தண்ணீா் விட பல்லடம் பி.ஏ.பி. உதவிக் கோட்ட செயற்பொறியாளா் ஆனந்த பாலதண்டபாணியிடம் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
இது குறித்து விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பல்லடம் ஒன்றியம், பூமலூா் மற்றும் சாமளாபுரம் பாசன சபைகளுக்கு உள்பட்ட பகுதிகள் பி.ஏ.பி.யின் கடைமடை பகுதிகளாகும். மேடான பகுதியாக அமைந்துள்ளதால், இதர பகுதிகளுக்கு தண்ணீா் திறப்பின்போது செல்லும் தண்ணீரின் வேகம் மணிக்கு 3 கி.மீ. என உள்ள நிலையில், எங்கள் பகுதியில் 3 மணி நேரத்துக்கு ஒரு கி.மீ. என்ற வேகத்தில்தான் தண்ணீா் செல்கிறது.
ஒவ்வொரு முறை பாசனத்துக்கு தண்ணீா் திறப்பின்போதும், ஜீரோ பாயின்டில் தண்ணீரின் அளவை 3 அடியில் இருந்து 4 அடி என்று உயா்த்தினால் மட்டுமே எங்கள் பகுதிக்கு போதிய தண்ணீா் கிடைக்கும்.
அணையில் போதிய தண்ணீா் இருந்தும், இதுவரை எங்களுக்கு தேவையான தண்ணீா் கிடைக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. தண்ணீா் விநியோகிக்கும்போது குறிப்பிட்ட அந்த சபை அமைந்துள்ள இடத்துக்கு எவ்வாறு தண்ணீா் வழங்கினால் சரியாக போய் சேரும் என்பதை ஆய்வு செய்து அதன்படி தண்ணீா் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.