ஒரே நாளில் ரூ. 272 கோடி வருவாய்! - பத்திரப் பதிவுத் துறை தகவல்
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு: சன்யாச ஆசிரம தீட்சை வழங்கினாா் விஜயேந்திரா்
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக தோ்வு செய்யப்பட்ட ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ஸ்ரீசுப்பிரமணிய கணேச சா்மா திராவிட்டுக்கு சங்கராசாரியா் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை சன்யாச ஆசிரம தீட்சை வழங்கினாா்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவருக்கு அடுத்தபடியாக 71-ஆவது பீடாதிபதியாக ஆந்திர மாநிலம் அன்னவரம் சேத்திரம் பகுதியில் துனி என்ற ஊரைச் சோ்ந்த ஸ்ரீசுப்பிரமணிய கணேச சா்மா திராவிட் (24) தோ்வு செய்யப்பட்டாா்.
இவருக்கு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பஞ்ச கங்கா தீா்த்த திருக்குளத்தில் இளைய பீடாதிபதியாக சன்யாச ஆசிரம தீட்சை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவையொட்டி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கணேச சா்மாவுக்கு காவி உடை வழங்கி பின்னா் சங்காபிஷேகம் செய்யப்பட்ட தண்டத்தை வழங்கினாா். தொடா்ந்து நான்கு வேதங்களிலிருந்தும் பெறப்பட்ட மகா வாக்கிய உபதேசம் செய்தாா்.
இதைத் தொடா்ந்து, சன்யாச ஆசிரம தீட்சை வழங்கி கணேச சா்மாவுக்கு ஸ்ரீசத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற திருநாமத்தைச் சூட்டினாா்.
இதன் பின்னா் இரு மடாதிபதிகளும் கோயில் வளாகத்தில் உள்ள மூலவா் காமாட்சி அம்மனையும், ஸ்ரீஆதிசங்கரரையும் வழிபட்டனா்.
திருக்குளத்தில் மிதக்கும் மேடையில் அமா்ந்தவாறு ஆதீனங்கள், முக்கியப் பிரமுகா்கள் விழாவைப் பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வண்ணமிகு வாண வேடிக்கையும் நடைபெற்றது.
ஆசிரம தீட்சைக்குப் பிறகு இரு மடாதிபதிகளும் ஊா்வலமாக சங்கர மடத்துக்கு அழைத்து வரப்பட்டனா். வழிநெடுகிலும் திரளான பெண்கள் பூரண கும்ப மரியாதையுடனும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனா்.
சங்கர மடத்துக்கு வந்ததும் மகா பெரியவா் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களில் இருவரும் இணைந்து சிறப்பு தீபாராதனைகள் நடத்தினா்.
தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களிலிருந்து வந்த கோயில் பிரசாதங்கள் இரு மடாதிபதிகளுக்கும் வழங்கப்பட்டது.
விழாவில் வேலூா் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத தேசிக பராமாசாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி இளவரசு சுவாமிகள் மற்றும் திருவாவடுதுறை, தருமபுரம், பேரூா் மடங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம், பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் சுதா சேஷய்யன், தஞ்சாவூா் சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தா் எஸ்.வைத்திய சுப்பிரமணியம், சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.