காவல் உயர் அதிகாரி வீட்டு வாசலில் 80 வயது முதியவர் கொலை!
ஒடிசாவில் காவல் உயர் அதிகாரி வீட்டின் வாசலின் முன்பு 80 வயது முதியவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
நுவாபாடா மாவட்டத்தின் சிர்டோல் கிராமத்தைச் சேர்ந்த சுக்லால் சாஹு (வயது 80) எனும் முதியவர், நேற்று (மார்ச்.3) அதிகாலை 4 மணியளவில் பூக்கள் பரிப்பதற்காக அருகிலுள்ள வனப்பகுதியை நோக்கி நடத்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் நுவாபாடா காவல் உயர் அதிகாரி (எஸ்.பி) வீட்டின் வாசலின் அருகில் வந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அந்த முதியவரின் தலையில் கூர்மையான ஆயுதத்தினால் தாக்கியுள்ளார்.
இந்த சத்தம் கேட்டு அதிகாரியின் வீட்டு காவலாளி அங்கு சென்று பார்த்தபோது அந்த முதியவர் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிழே சரிந்துள்ளார். ஆனால், அதற்குள் அந்த கொலையாளி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அந்த முதியவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: அபு தாபியில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை! அவரது கடைசி ஆசை
இதுகுறித்து, தகவலறிந்து சம்பவயிடத்துக்கு விரைந்த காவல் துறையினர் முதியவரின் சடலத்தை கைப்பற்றி உடல் கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். அந்த சோதனைக்கு பின்னர் முதியவரின் சடலம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், பலியான முதியவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், வயது முதிர்வினால் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே இருந்த முதியவரின் கொலையில் தங்களுக்கு யார் மீது சந்தேகமில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, முதியவரின் கொலையினால் நுவாபாடா பகுதியிலுள்ள சட்டம் ஒழுங்கு குறித்து கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் தொடராமல் இருக்க அப்பகுதியின் பாதுகாப்பை அதிகரித்து, போலீஸாரின் ரோந்து பணிகள் மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.