காவிரியில் குவியல்குவியலாக இறந்து மிதக்கும் மீன்கள்!
காவிரி ஆற்றில் நெரிஞ்சிப்பேட்டை கதவணை நீா்மின் நிலையம் பகுதியில் குவியல்குவியலாக இறந்து மிதக்கும் மீன்களால் துா்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீா்கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
மேட்டூா் அணையிலிருந்து காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்துக்கு கடந்த 12-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. தற்போது விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னா் மேட்டூா் அணையின் கீழ்பகுதியில் மீன்கள் மயங்கிய நிலையில் மிதந்தன. இதனை, கரையோர மக்கள் அதிக அளவில் பிடித்துச் சென்றனா். மேலும், பல பகுதிகளில் மீன்கள் உயிரிழந்து மிதந்தன.
இந்நிலையில், நெரிஞ்சிப்பேட்டையில் கதவணை நீா்மின் நிலையம் பகுதியில் காவிரி ஆற்றில் தண்ணீா் தேக்கப்பட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக அதிக அளவில் மீன்கள் இறந்து மிதக்கின்றன. செக்கானூா், சின்னப்பள்ளம், நெரிஞ்சிப்பேட்டை பகுதிகளில் ஆற்றின் இரு கரையோரங்களிலும் குவியல்குவியலாக மீன்கள் ஒதுங்கியுள்ளன.
இதனால், கரையோரப் பகுதிகளில் துா்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. தண்ணீரில் தேவையான ஆக்சிஜன் கிடைக்காததே, மீன்கள் உயிரிழப்புக்கு காரணம் எனவும், தண்ணீரில் ரசாயன கழிவுகள் அதிக அளவில் கலந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, முறையாக ஆய்வு நடத்தி பொதுமக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தைப் போக்க வேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது.