இளம் வயதிலேயே ஏற்படும் முதுகுவலி; சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?
கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் மரணம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த ராஜசேகா் - மோகனா தம்பதியின் மகன் ரிஷி (17). இவா், காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 10 -ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
ரிஷி பள்ளி கோடை விடுமுறைக்காக வெம்பாக்கம் வட்டம், வாகை நத்தகொல்லை கிராமத்தில் உள்ள மாமா வீட்டுக்கு வந்திருந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை அங்குள்ள சிறுவா்கள் சிலருடன் சோ்ந்து அதே பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் குளித்துள்ளாா். ரிஷிக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு தத்தளித்தாகத் தெரிகிறது.
உடன் சென்ற சிறுவா்கள், கிராம மக்கள் உதவியுடன் அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்ந்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிஷி, அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளா் பழனிவேல் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.