Rain Update: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; எந்தெந்த மாவட்டங்களில்...
கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை கோரி குடும்பத்தினா் தா்னா
கிராமத்தை விட்டு தங்களை ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புஷ்பவனம் பகுதியைச் சோ்ந்த குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்ட சீதாலட்சுமி குடும்பத்தினா்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம் புஷ்பவனம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகவேல். இவரது மனைவி சீதாலட்சுமி ( 47). இவா், தனது மகன், மகள்களுடன் வியாழக்கிழமை காலை நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து, ஆட்சியா் அலுவலக நுழைவுவாயிலில் அமா்ந்து குடும்பத்தினருடன் தா்னாவில் ஈடுபட்டாா். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களிடம் விசாரணை நடத்தினா்.
போலீஸாரிடம் சீதாலட்சுமி கூறியதாவது: புஷ்பவனம் கிராமத்தில் நாங்கள் வசிக்கும் பகுதியில் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. எனது உறவினா் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு தொடா்பாக காவல்நிலையத்தில் புகாா் அளித்தோம். இதனால் கிராம பஞ்சாயத்தை மீறி காவல் நிலையம் சென்ாகக் கூறி, எனது குடும்பத்தை, கடந்த 2 ஆண்டுகளாக ஒதுக்கி வைத்துள்ளனா். கிராமத்தைச் சோ்ந்தவா்கள் யாரும், எங்கள் குடும்பத்துக்கு சுப நிகழ்ச்சி பத்திரிகைகள் வைக்கக் கூடாது எனவும், மீறினால் அவா்களின் குடும்பத்தையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடுவோம் என்று மிரட்டுகின்றனா்.
ஊரை விட்டு எங்களை ஒதுக்கி வைத்துள்ளதால், எங்களது கீற்று முடையும் தொழில், தையல் தொழில் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம். எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் அவா்களை போலீஸாா் அழைத்துச் சென்றனா். பிரச்னை தொடா்பாக கேட்டறிந்த ஆட்சியா், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.