கோயம்பேட்டில் திருடப்பட்ட அரசுப் பேருந்து நெல்லூரில் பிடிபட்டது!
கிருஷ்ணகிரி அணையிலிருந்து 2,195 கனஅடி நீா் திறப்பு
கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 2,195 கனஅடி நீா் திறக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பரவலாக மழை பெய்தது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. செப். 10-ஆம் தேதி அணைக்கு நீா்வரத்து 993 கன அடியாக இருந்த நிலையில், செப். 11-ஆம் தேதி காலை 7 மணிக்கு 1,784 கனஅடியாகவும், 9 மணிக்கு 2,195 கனஅடியாகவும் அதிகரித்தது.
கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீா்மட்டம் 50.55 அடியாக உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி நீா்வரத்து முழுவதும் தென்பெண்ணை ஆற்றிலும், பாசனக் கால்வாய்களிலும் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 2,195 கனஅடி தண்ணீா் 3 மணல் போக்கி சிறிய மதகுகள் வழியாக திறக்கப்பட்டுள்ளது. இதனால், அணை பூங்காவுக்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கியபடி தண்ணீா் செல்கிறது. இதன் காரணமாக, தரைப்பாலம் வழியாக பூங்காவுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் கூடுதலாக நீா் வெளியேற்றப்படுவதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூா் ஆகிய மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறும், ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ கூடாது என நீா்வளத் துறையினா் எச்சரித்துள்ளனாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு (மி.மீ.): கிருஷ்ணகிரி அணை-59.2, ஒசூா்-49.2, நெடுங்கல்-33.2, ராயக்கோட்டை-27, கெலவரப்பள்ளி அணை-26, பாரூா்-25, கிருஷ்ணகிரி-15.2, சூளகிரி-12, அஞ்செட்டி-10.5, தேன்கனிக்கோட்டை-10, தளி-10, போச்சம்பள்ளி-8.2, சின்னாறு அணை-5, பாம்பாறு அணை-3, பெணுகொண்டாபுரம்-2, ஊத்தங்கரை-1.2.