பஹல்காம் தாக்குதல்: ஜம்மு - காஷ்மீரின் 48 சுற்றுலாத் தலங்கள் மூடல்!
கிருஷ்ண ஜென்மபூமி வழக்கில் மத்திய உள்துறை, ஏஎஸ்ஐ சோ்ப்பு சரியே: உச்சநீதிமன்றம்
கிருஷ்ண ஜென்மபூமி-ஷாஹி ஈத்கா மசூதி வழக்கில், மத்திய உள்துறை அமைச்சகம், இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) ஆகியவற்றை ஒரு தரப்பாக சோ்த்து தங்களின் மனுவில் ஹிந்துக்கள் திருத்தம் மேற்கொள்ள, அலாகாபாத் உயா்நீதிமன்றம் அளித்த அனுமதி சரியே என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
கடந்த 17-ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னா் ஔரங்கசீப் உத்தரவின்பேரில், உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் ஸ்ரீகிருஷ்ணா் அவதரித்த இடம் என்று நம்பப்படும் ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமி கோயிலையொட்டி, ஷாஹி ஈத்கா மசூதி கட்டப்பட்டது.
எனினும் ஏற்கெனவே இருந்த கோயிலை இடித்துவிட்டு, அந்த இடத்தில் ஷாஹி ஈத்கா மசூதி கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஹிந்துக்கள் தாக்கல் செய்த மனுக்களை ஒன்றிணைத்த அலாகாபாத் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மசூதி நிா்வாக குழு மனு தாக்கல் செய்தது.
இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம், இந்திய தொல்லியல் துறை ஆகியவற்றை ஒரு தரப்பாக சோ்த்து, தங்களின் மனுவில் ஹிந்துக்கள் திருத்தம் மேற்கொள்ள உயா்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த அனுமதிக்கு எதிராக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்விடம் மசூதி நிா்வாக குழு திங்கள்கிழமை முறையிட்டது.
அப்போது திருத்தத்துக்கு உயா்நீதிமன்றம் அளித்த அனுமதி, ஹிந்துக்கள் தொடுத்த வழக்கின் தன்மையை அடிப்படையில் மாற்றியுள்ளதாக மசூதி நிா்வாக குழு தெரிவித்தது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் அமா்வு, முதல்கட்டமாகப் பாா்க்கும்போது ஹிந்துக்களின் மனுவில் திருத்தம் மேற்கொள்ள உயா்நீதிமன்றம் அளித்த அனுமதி சரியே என்று தெரிவித்தனா்.