குஜராத் மாவட்ட பிரிவுத் தலைவர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!
குஜராத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பிரிவுத் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று கலந்துரையாடினார்.
காங்கிரஸ் தொண்டர்களுக்கும், மாவட்ட பிரிவுகளின் தலைவர்களுக்கும் மூன்று நாள் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக ஒருநாள் பயணமாகக் குஜராத் வந்துள்ள ராகுல் இன்று காலை வதோதரா விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அங்கிருந்து ஆனந்த் என்ற இடத்திற்கு அழைத்துவரப்பட்டார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
சங்கதன் சுஜன் அபியான்(கட்சி அமைப்பை வலுப்படுத்தும் பிரசாரம்) கீழ் மாவட்டத் தலைவர்களின் பயிற்சி முகாமில் உரையாற்றினார்.
2027 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, குஜராத் காங்கிரஸ், ஆனந்த் நகருக்கு அருகிலுள்ள ஒரு உணவகத்தில் மாவட்ட காங்கிரஸ் குழுக்களின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர்களுக்கான முகாம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாம் ஜூலை 28ஆம் தேதி நிறைவடைகின்றது.
2027 தேர்தலுக்கான திட்ட வரைபடத்தைத் தயாரிப்பதே இந்த முகாமின் முக்கிய நோக்கம் என்று கட்சி முன்பு கூறியிருந்தது.
பிற்பகல் 3 மணியளவில், பல்வேறு கூட்டுறவு பால் சங்கங்கள், பால் பண்ணைகளில் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவுத் துறைத் தலைவர்கள் மற்றும் பால் பண்ணை விவசாயிகளுடன் காந்தி கலந்துரையாட உள்ளார்.