குஜராத் விமான விபத்து! உயிர்த் தப்பிய விடுதி மாணவர்கள் கலக்கம்!
அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்ட விடுதியில் இருந்த மாணவர்கள் வெளியேறி வருகின்றனர்.
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான மருத்துவ விடுதி மாணவர்களுக்கும் இழப்பீடு வழங்குமாறு இந்திய மருத்துவக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதனிடையே, தங்கள் விடுதியின் மேல் விமானம் மோதிய விபத்தால் அச்சமடைந்த விடுதி மாணவர்கள், விடுதியைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
மரணத்தை கண்முன்னே பார்த்ததால், தற்போது விடுதியைவிட்டு கலக்கத்துடன் வெளியேறுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். வெளியேறி வருபவர்கள் அனைவரும், விபத்தின்போது சிறு காயங்களுடன் உயிர்த் தப்பியது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 12ஆம் தேதி அகமதாபாதிலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், விமான நிலையத்துக்கு அருகே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் பலியாகினர்.
பலியானவர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என ஏர் இந்தியாவின் டாடா குழுமம் அறிவித்திருந்தது.
ஏர் இந்தியா விமானம், பிஜே மருத்துவக் கல்லூரியின் குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்ததில், அங்கிருந்த மாணவர் விடுதி கடும் சேதமடைந்தது. அதிலிருந்த 7 மருத்துவ மாணவர்கள் பலியாகினர்.
மேலும், விடுதியில் மாணவர்கள், பேராசியர்களுக்காக உணவு சமைத்துக் கொண்டிருந்த ஷர்லாபென் தாக்கூர் என்ற பெண்ணும், அவரது 2 வயது பேத்தியும் விமான விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் இருவரின் உடல்களையும், ஷர்லாபெனின் மகன் தேடி வருகிறார்.
இதையும் படிக்க:குஜராத் விமான விபத்து விசாரணைக்கு 3 மாத கால அவகாசம்! மத்திய அமைச்சர் உறுதி!