குஜராத் விமான விபத்து! பலியான கேரள செவிலியரை விமர்சித்த வட்டாட்சியர் பணியிடை நீக்கம்!
அகமதாபாத் விமான விபத்தில் பலியான செவிலியரை விமர்சித்த கேரள தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் ரஞ்சிதா கோபகுமாரன் (42) பலியானது, அம்மாநிலத்தினரிடையே மட்டுமல்லாமல், அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரஞ்சிதாவின் மரணத்தை விமர்சித்த வெள்ளரிக்குண்டு துணை வட்டாட்சியர் பவித்ரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
விமான விபத்தில் பலியான ரஞ்சிதா குறித்து முகநூல் பதிவில், ரஞ்சிதாவுக்கு மாநில அரசு வேலை கொடுத்தது. ஆனால், அவர் வெளிநாட்டுக்கு சென்றார். அதற்கான பலனையும் அவர் அடைந்து விட்டார் என்று பவித்ரன் கருத்து தெரிவித்தார்.
பவித்ரனின் இந்த அநாகரிக கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்த நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து காசர்கோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த செவிலியா் ரஞ்சிதா கோபகுமாரன் (42) பலியானார். ஓராண்டு முன்பு லண்டனுக்கு செவிலியா் வேலைக்காகச் சென்ற அவருக்கு, சமீபத்தில் சொந்த ஊரில் மாநில சுகாதார சேவையில் வேலை கிடைத்தது.
இதனிடையே, பணி ஒப்பந்த காலம் நிறைவடையும் முன்பாக, சொந்த ஊருக்கு ரஞ்சிதா கடந்த வாரம் வந்தார். பத்தினம்திட்டாவில் சொந்தமாக வீடு கட்டி வரும் ரஞ்சிதா, அதன் இறுதிப்பணிகளை பார்வையிடவும் இந்த பயணத்தை பயன்படுத்திக்கொண்டார். லண்டனுக்கு சென்றுவிட்டு, விரைவில் சொந்த ஊரில் குடும்பத்துடன் வாழ கனவு கண்ட அவரது வாழ்க்கை கனவாகவே போனது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க:கடைசி செல்ஃபி! லண்டன் கனவுடன் புறப்பட்ட மருத்துவ தம்பதியின் கதை...