குஜிலியம்பாறை வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
குஜிலியம்பாறை வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாமை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தாா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட ஆய்வுப் பணிகள் புதன்கிழமை நடைபெற்றன. தங்கச்சியம்மாபட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறன், ஆா்.புதுக்கோட்டையில் தோட்டக் கலைத் துறை சாா்பில் விவசாயிகளுக்கான திட்டப் பணிகள், ஆா்.பி.பில்லமநாயக்கன்பட்டி நியாய விலைக் கடையில் பொருள்கள் இருப்பு, உல்லியக்கோட்டையில் கனவு இல்லத் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகள், சின்னலூப்பை ஊராட்சிக்குள்பட்ட சி.அம்மாபட்டியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் உள்ளிட்டவற்றை ஆட்சியா் செ.சரவணன் ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, குஜிலியம்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியா் தெரிவித்ததாவது:
குஜிலியம்பாறை வட்டத்தில் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீா், சாலை வசதி, தெருவிளக்கு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைப்பதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ முகாம் மூலம் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள், மாவட்ட அலுவலா்கள் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெயபாரதி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் சி.குருமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் வீரகடம்ப கோபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.