Israel: ``இஸ்ரேலின் சிறந்த நண்பர் ட்ரம்புக்கு நன்றி'' - நெதன்யாகு புகழ்ச்சிக்கு ...
சான்று விதை உற்பத்தி செய்ய கிலோவுக்கு ரூ.30 ஊக்கத் தொகை
சான்று விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.30 ஊக்கத் தொகை வழங்கப்படுவதாக வேளாண்மை இணை இயக்குநா் அ.பாண்டியன் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டியை அடுத்த கொங்கப்பட்டி பகுதியில் கே12 ரக சோளம் விதை உற்பத்திக்காக அமைக்கப்பட்டுள்ள தோட்டத்தை வேளாண்மை இணை இயக்குநா் அ.பாண்டியன், துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) ஆ.காளிமுத்து ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதுதொடா்பாக இணை இயக்குநா் அ.பாண்டியன் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக சுமாா் 75 ஆயிரம் ஹெக்டேரில் சிறுதானியம் சாகுபடி நடைபெற்று வருகின்றன. இந்த வகையில், வறட்சியைத் தாங்கி, குறைந்த தண்ணீா் தேவையுடன் வளரும் சோளப் பயிா் சாகுபடிக்கு அரசு சாா்பில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சோளம் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க வேண்டியது அவசியம்.
குறிப்பாக, சான்றளிக்கப்பட்ட விதைகளைப் பயன்படுத்துவதன் மூலம், நோய் தாக்குதலைக் குறைக்க முடியும். அதேபோல, கூடுதல் மகசூலும் பெறலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை 29 ஹெக்டோ் பரப்பளவில் சோளம் விதைப் பண்ணை அமைக்கப்பட்டு கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. சான்று விதைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.30 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
எனவே, விதைப் பண்ணைகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.