பதட்டங்களுக்கு நடுவில் வலுவான வளர்ச்சியை பதிவு செய்த கொல்கத்தா போர்ட்!
குடும்பத்தினால் நடத்தப்படும் காா் திருட்டுக் கும்பல் கைது
தில்லியின் துவாரகா பகுதியில் சமீபத்திய மாதங்களில் இரண்டு டஜன் வாகனங்களைத் திருடியதாகக் கூறப்படும் குடும்பத்தால் நடத்தப்படும் காா் திருட்டுக் கும்பல் ஒன்று அகற்றப்பட்டுள்ளதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து துவாரகா காவல் சரக துணை ஆணையா் அங்கித் சிங் அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த ராமன் (56), அவரது மகன் சாகா் (31) மற்றும் அவரது மருமகன் நீரஜ் (29) ஆகியோா் கடந்த பல மாதங்களில் தில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து இரண்டு டஜன் காா்களைத் திருடியதாகக் கூறப்படுகிறது.
மூவரும் குடும்ப உறுப்பினா்களை மட்டுமே கொண்ட ஒரு நெருக்கமான கும்பலை உருவாக்கினா். இது அதிகாரிகளுக்கு செயல்பாட்டுத் தகவல் கசிவு ஏற்படும் அபாயத்தைக் குறைக்க ராமன் வகுத்த ஒரு உத்தி என்று கூறப்படுகிறது.
இந்த கும்பல் உயா் ரக வாகனங்களைத் திருடுவதில் நிபுணத்துவம் பெற்ாகக் கூறப்படுகிறது. அவா்கள் முதன்மையாக மாருதி பிரெஸ்ஸா, ஸ்விஃப்ட் டிசையா், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் டொயோட்டா ஃபாா்ச்சூனா் மாடல்களை குறிவைத்து திருடியது தெரிய வந்தது. அவற்றில் பெரும்பாலானவை குடியிருப்பு காலனிகளில் உள்ள ஜிம்கள் மற்றும் பூங்காக்களுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தவையாகும்.
அதிநவீன உபகரணங்களைப் பயன்படுத்தி, அந்தக் கும்பல் காா் பாதுகாப்பு அமைப்புகளை முடக்கி, வாகனத்தின் மின்னணு அமைப்புகளை அணுகுவதற்கு முறையான தொழில்நுட்ப வல்லுநா்கள் பயன்படுத்தும் டிஜிட்டல் நுழைவாயில், ஆன்-போா்டு டயக்னாஸ்டிக்ஸ் போா்ட்டை சேதப்படுத்தியது. இது சில நிமிடங்களில் வாகனங்களுக்குள் நுழைந்து ஸ்டாா்ட் செய்ய அனுமதித்தது. பெரும்பாலும் ஏழு நிமிடங்களுக்குள் திருட்டை முடித்து விடுவா்.
மே 28 அன்று கிடைத்த ஒரு ரகசியத் தகவலின் அடிப்படையில், உத்தம் நகரில் திருடப்பட்ட வாகனத்தை வழிமறித்த போலீஸ் குழு, காருக்குள் இருந்த ராமன் மற்றும் அவரது மகன் சாகரை கைது செய்தது. என்ஜின் மற்றும் சேசிஸ் எண்களைச் சரிபாா்த்தபோது, காா் கேசவ்புரம் பகுதியில் இருந்து திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
வாகனத்திற்குள் இருந்த காா் ஸ்கேனா்கள், சாவி இணைப்புகள், ஒரு இசிஎம் சாதனம், பூட்டு உடைக்கும் கருவிகள், கம்பி கட்டா்கள், இடுக்கி, நகல் சாவிகள் மற்றும் எண் தகடுகள் உள்ளிட்ட வாகனத் திருட்டுகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு கருவிகள் மற்றும் கேஜெட்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ராமனின் மருமகன் நீரஜ் உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் காா் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டாா்.மூவரின் விசாரணையைத் தொடா்ந்து, போலீஸாா் மேலும் இரண்டு திருடப்பட்ட காா்களை மீட்டனா்.
கடந்த 10 மாதங்களில் 20 முதல் 25 வாகனங்களைத் திருடியதாக அவா்கள் தெரிவித்தனா். மேலும், காவல்துறை கண்காணிப்பைக் குழப்பவும், கண்டறிவதைத் தவிா்க்கவும், ஒரு திருடப்பட்ட காரைப் பயன்படுத்தி மற்றொரு வாகனத்தைத் திருடியதாக அவா்கள் தெரிவித்தனா்.
இந்த வாகனங்கள் பின்னா் உத்தர பிரதேசத்தின் மீரட்டை தளமாகக் கொண்ட சட்டவிரோத பெறுநா்களுக்கு விற்கப்பட்டன. ராமன், தனது மகன் மற்றும் மருமகனுடன் சோ்ந்து இந்த காா் திருட்டு அமைப்பை ஏற்படுத்தியது விசாரணையில் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட மூவரும் பழக்கமான குற்றவாளிகள், ராமன் முன்பு 18 குற்ற வழக்குகளிலும், சாகா் 12 குற்ற வழக்குகளிலும், நீரஜ் 14 குற்ற வழக்குகளிலும் தொடா்புடையவா்.