கொலை வழக்கு: மகாராஷ்டிர அமைச்சர் ராஜிநாமா!
பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்ட நிலையில், மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்சய் முண்டே ராஜிநாமா செய்துள்ளார்.
அமைச்சர் முண்டேவின் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டதாக அறிவித்த முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், ஆளுநருக்கு ராஜிநாமா கடிதத்தை அனுப்பியிருப்பதாக அறிவித்துள்ளார்.
பீட் மாவட்டத்தில் பஞ்சயாத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக் என்பவர கடந்த டிசம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கும் மாநில அமைச்சருக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையில் தேசியவாத காங்கிரஸைச் சோ்ந்த மாநில அமைச்சா் தனஞ்சய் முண்டேவின் நெருங்கிய கூட்டாளி வால்மிக் கராத் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, புணேவில் உள்ள காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி) அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் வால்மிக் சரணடைந்தார்.
இதனால் தனஞ்சய் முண்டேவை அமைச்சர் பதவியிலிருந்து விலகக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிக்க : மகாராஷ்டிர அமைச்சரை ராஜிநாமா செய்ய உத்தரவிட்ட ஃபட்னவீஸ்! ஏன்?
மகாராஷ்டிர அரசுக்கு அழுத்தம் அதிகரித்த நிலையில், பாஜகவின் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸின் தலைவரும் துணை முதல்வருமான அஜித் பவாருடன் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் திங்கள்கிழமை இரவு ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு முண்டேவை பதவி விலகுமாறு முதல்வர் ஃபட்னவீஸ் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவர் ராஜிநாமா செய்துள்ளார்.