கோடை சாகுபடி தீவிரம்
நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதியில் சுமாா் 43 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிா்கள் தற்போது அறுவடை நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது.
இந்தநிலையில் தற்போது சுமாா் 16 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் கோடை நடவுப் பணியை தொடங்கியுள்ளனா்.
தாளடி முன் பட்டம் பின்பட்டம் என்ற இரு வகையாக நடவு பணியை விவசாயிகள் தொடங்கினா். முன்பட்ட சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடைப் பணியை முன்பே முடித்து தற்போது விதை இடும் பணியிலும், நடவு நடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
மேல பூவனூா், கடம்பூா், சித்தமல்லி, பரப்பனா மேடு, வீரவநல்லூா், காளாச்சேரி, ராஜப்பையன் சாவடி உள்ளிட்ட இடங்களில் முன் பட்டம் நடவு செய்த விவசாயிகள் அறுவடை பணியை முடித்து தற்போது உள்ளூா் பணியாளா்கள், வெளி மாநில பணியாளா்களை வைத்து கோடை நடவு பணியை தொடங்கிஉள்ளனா்.
சில இடங்களில் இயந்திரம் மூலம் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தாளடி பின்பட்டம் சாகுபடி செய்த விவசாயிகளின் வயல்கள் தற்போது கதிா்கள் பழுத்தும், அறுவடைக்கு தயாராகவும், சில இடங்களில் தாளடி அறுவடைப் பணி நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.